10 மேயர்கள், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் 25ம் தேதி பதவியேற்பு- 29ல் துணை மேயர் தேர்தல்

தமிழகத்தி்ல் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடந்தது. நேற்றுமுன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
சட்டசபை தேர்தலைப் போன்று உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக அதிக இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. 10 மாநகராட்சி மேயர் பதவிகளையும் அதிமுக கைபற்றியது.
இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் வரும் 25ம் தேதி பதவி ஏற்கவுள்ளனர்.
இதையடுத்து துணை மேயர்கள், நகராட்சி, பேரூராட்சித் துணைத் தலைவர்கள் உள்பட 14,020 பதவிகளுக்கு அதாவது ஊரகப் பகுதிகளில் 13,356 பதவிகளுக்கும், நகர்ப்புற பகுதிகளில் 664 பதவிகளுக்கும் வரும் 29ம் தேதி மறைமுக தேர்தல் நடக்கிறது.
அந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் 31 பேர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர்கள் 31 பேர், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் 385 பேர், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர்கள் 385 பேர், சிற்றூராட்சி துணைத் தலைவர்கள் 12,524 பேர், மாநகராட்சி துணை மேயர்கள் 10 பேர், நகராட்சி துணைத் தலைவர்கள் 125 பேர், பேரூராட்சி துணைத் தலைவர்கள் 529 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினர் அமோக வெற்றி பெற்றுள்ளதால் மறைமுகத் தேர்தலிலும் அதிமுகவினரே அதிக அளவில் தேர்வாகக்கூடும் என்று தெரிகிறது. போட்டி இருக்கும் பட்சத்தில் வாக்குப்பெட்டி மூலம் தேர்தல் நடத்தி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.












Click it and Unblock the Notifications