சொந்த ஊரில் அமைச்சர் கருப்பசாமியின் உடல் அடக்கம் நடந்தது

அமைச்சர்கள், அதிகாரிகள், அதிமுக பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கருப்பசாமிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
56 வயதான கருப்பசாமி நேற்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டிருந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். கருப்பசாமியின் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா அதிர்ச்சியும், ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்திருந்தார். மேலும் அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்து வந்து கருப்பசாமி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து கருப்பசாமியின் உடல் இன்று காலை சங்கரன் கோவில் அருகே உள்ள அவரது சொந்த ஊரான புளியம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
அவருக்குச் சொந்தமான தோட்டத்தில் கருப்பசாமியின் உடல் அரசு மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக கருப்பசாமி உடலுக்கு பொதுமக்கள் பெரும் திரளாக வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் வைகோ கூறுகையில்,
அ.தி.மு.க. உதித்த நாள் முதல் எம்.ஜி.ஆரின் மனதில் இடம் பிடித்து கிளைச் செயலாளர், ஒன்றிய செயலாளர், அமைப்பு செயலாளர் என படிப்படியாக உயர்ந்த விசுவாசமிக்க ஊழியர் கருப்பசாமி. அ.தி.மு.க. கடும் சோதனைகளுக்கு உள்ளான போதெல்லாம் கட்சியில் உறுதுணையாக இருந்தவர்.
எதிர்கட்சியாக இருந்தபோது, ஆளுங்கட்சிக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக வாதம் செய்தவர். எங்கள் மண்ணை சேர்ந்த கருப்பசாமி, சிறிதளவுகூட பிறருக்கு தீங்கு நினைக்காதவர். இப்பகுதி மக்களிடையே வேற்றுமைக்கு இடம் கொடுக்காமல், சாதி ஒற்றுமைக்கு பாலமாக இருந்தவர்.
2006 ல் அ.தி.மு.க. கூட்டணியில் நான் இருந்த போது, எனது சொந்த ஊரில் கருப்பசாமியை ஆதரித்து பேசிவிட்டு தான் எனது பிரசாரத்தை தொடங்கினேன். அப்போது அவர் ஒவ்வொரு முறையும், எனது வீட்டுக்கு வந்து என்னை சந்தித்து விட்டு, எனது தாயிடம் ஆசி பெற்று செல்வார். அவர் நோய்வாய்ப்பட்டதை அறிந்த நான் துடித்துப் போனேன்.
முன்பு அவரது மகள் திருமண விழாவுக்கு வந்திருந்தேன். தற்போது அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளேன். நீண்டகாலம் வாழ்ந்து சமுதாயத் தொண்டாற்ற வேண்டியவரை நாம் இழந்துள்ளோம். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் உருக்கமாக.












Click it and Unblock the Notifications