கூடங்குளம் அணு உலை குறித்து நோட்டீஸ் வெளியிட்டவருக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார்
நாகர்கோவில்: கூடங்குளம் அணு உலை தொழில்நுட்பம் குறித்த நோட்டீஸ் வெளியிட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இந்துக்கள் வாழ்வுரிமை இயக்க தலைவர் மற்றும் 12 பேர் அடங்கிய குழுவினர் 'பொதுமக்கள் கவனத்திற்கு சில உண்மைகள்' என்ற நோட்டீஸ் அச்சடித்து வெளியிட்டுள்ளனர்.
அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது,
உலகம் முழுவதும் உள்ள வளர்ச்சி அடைந்த நாடுகளில் மொத்தம் 434 அணு உலைகள் இயங்கி வருகின்றன. பிரான்ஸ் நாட்டில் 85 சதவீதம், ஜபபான் நாட்டில் 55 சதவீதம், அமெரிக்காவில் 20 சதவீதம் அணு உலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.
கூடங்குளம் அணு உலை போன்று ஈரானில் ஒன்றும், சீனாவில் நான்கும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் தாராபூரில் 1969ல் மின் உற்பத்தியை துவங்கிய அணுஉலையால் இன்றுவரை எந்த ஆபத்தும் இல்லை. கல்பாக்கம் அணு உலை 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் மொத்தம் 21 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. மின்சாரம் இல்லாததால் தொழிற்சாலைகள் துவங்க முடியாமலும், வேலை வாய்ப்பை பெருக்க முடியாத நிலையும் உள்ளது. காற்று, சூரிய ஒளி மின் உற்பத்தி எந்த நாட்டிலும் இதுவரை வெற்றி பெறவில்லை. தற்போது அணு பிளவின் (நியூக்ளியார் பிஷன்) மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
அடுத்தபடியாக அணு சேர்க்கை (நியூக்ளியார் பியூஷன்) மூலம் மின்சாரம் தயாரிக்கும் முயற்சி நடக்கிறது. இந்த முறை வெற்றி அடையும் போது ஒரே ஒரு அணு உலையில் இருந்து தேவைக்கு அதிகமான மின்சாரம் பெற முடியும். கூடங்குளம் அணுஉலையில் கடைசியில் வரும் கழிவுகள் பல்வேறு சுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுவதால் அணுகழிவு என்ற பேச்சுக்கே இடமில்லை.
இங்கு நான்கு கட்டமாக தானியங்கி பாதுகாப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, அணு உலைகளின் பாதுகாப்பை தெரிந்து கொண்டு நாட்டின் வளமான வருங்காலத்தை உருவாக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸ் வெளியிடப்பட்ட பின் அதை வெளியிட்டவர்களுக்கு பல்வேறு மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கேப்டன் எஸ்.பி. குட்டி, மாவட்ட எஸ். பி. யிடம் மனு கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பணிகள் முடிந்து மின்சாரம் கிடைக்க இருக்கும் நிலையில் கூடங்குளம் சார்ந்த பொதுமக்கள் அதன் பாதுகாப்பு தன்மை குறித்த பயம் காரணமாக போராட்டத்தில் ஈடுபடுவதால், மின் நிலையத்தின் தொழில்நுட்ப நிலை குறித்து 12 பேர் கொண்ட குழுவினர் பொதுமக்கள் கவனத்திற்கு என்ற நோட்டீஸ் வெளியிட்டோம். அதில் அணுமின் நிலைய தொழில்நுட்ப உண்மை நிலைகளை மட்டுமே தெரிவித்துள்ளோம். எவரையும் குறை சொல்லவில்லை. அரசை ஆதரித்தும் எழுதப்படவில்லை. தேசநலன் சார்ந்த பொதுவான கருத்துக்களை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளோம்.
இந்த நோட்டீஸ் வெளியிடப்பட்ட பின்னர் எனது செல்போனுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கின்றன. எனவே, கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனக்கும் எனது குடும்பத்திற்கும் பாதுகாப்ப தர வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications