விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத அமைப்பு அல்ல- நெதர்லாந்து கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

நெதர்லாந்தில், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி திரட்டியதாக கூறி ஐந்து தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக நிதி திரட்டியதாகவும், மிரட்டிப் பணம் பறித்ததாகவும், வன்முறையில் ஈடுபடத் திட்டமிட்டிருந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
இந்த வழக்கை தி ஹேக் மாவட்ட கோர்ட் விசாரித்தது. விசாரணையின்போது, விடுதலைப் புலிகள் இயக்கம் சர்வதேச அளவில் தீவிரவாத செயல்களில் ஈடுபடவில்லை. அது உள்நாட்டுப் போரில் மட்டுமே ஈடுபட்டு வந்தது. எனவே அதை சர்வதேச தீவிரவாத அமைப்பாக கருத முடியாது. ஐரோப்பிய கொள்கைகளின்படி அப்படிக் கருத முடியாது.
எனவே ஐந்து பேர் மீதான தீவிரவாத தொடர்பு மற்றும் மிரட்டல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் கைவிடப்படுகின்றன.
அதேசமயம், விடுதலைப் புலிகள் அமைப்பு ஐரோப்பிய யூனியனின் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் உள்ளது. அந்த வகையில் நெதர்லாந்து நாட்டுச் சட்டப்படியும் அது பொருந்தும். எனவே தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற வகையிலும், வன்முறை அல்லாத செயலுக்காக பணம் திரட்டியது தொடர்பாகவும் ஐந்து பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்படுகின்றனர் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இந்தத் தீர்ப்பைக் கேட்பதற்காக கோர்ட்டில் பெருமளவில் ஈழத் தமிழர்கள் குவிந்திருந்தனர். அவர்களிடம் தீர்ப்பு இரு வேறு கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீர்ப்பின் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத அமைப்பு அல்ல என்று கோர்ட் கூறியுள்ளதை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். அதேசமயம், பணம் வசூலித்ததற்காக தண்டிக்கப்படுவதாக கோர்ட் கூறியுள்ளதை நாங்கள் ஏற்க மாட்டோம். காரணம், நாங்களே விரும்பித்தான் நிதியைக் கொடுத்தோம் என்று கூறியுள்ளனர்.
இந்த வழக்கில் தமிழர்களுக்காக ஆஜராகி வாதாடிய பிரபல வழக்கறிஞர் விக்டர் கோப் கூறுகையில்,
இந்தத் தீர்ப்பு விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மிக மிக முக்கியமானது. ஐரோப்பிய யூனியனின் தீவிரவாத அமைப்புகள் பட்டியலிலிருந்து தங்களது அமைப்பின் பெயரை நீக்க தற்போது அவர்களுக்கு வலுவான காரணம் கிடைத்துள்ளது. இந்தத் தீர்ப்பு ஐரோப்பிய யூனியனின் விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்த பார்வையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நான் எனது வாதத்தின்போது கடாபிக்கு எதிராக ஆயுதம் தாங்கிய புரட்சிப் படையினருக்கும், இலங்கையில் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடிய விடுதலைப் புலிகளுக்கும் பெரும் வித்தியாசம் இல்லை. இருவருமே ஒரே நோக்கத்திற்காகத்தான் போராடினார்கள். விடுதலைப் புலிகள் அமைப்பின் போராட்டம் ஒரு சுதந்திரப் போராட்டம், அவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று கூறினேன் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், இருப்பினும் தீர்ப்பு ஒன்றாகவும், உத்தரவு ஒன்றாகவும் உள்ளது. எனவே இதை எதிர்த்து நாங்கள் அப்பீல் செய்வோம் என்றார்.
தற்போது தமிழர்கள் ஐவருக்கும் 2 ஆண்டு முதல் 6 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications