உள்ளாட்சித் தேர்தலில் சிபிஎம்முக்கு 1.02%, சிபிஐக்கு வெறும் 0.71% வாக்குகள்!
சென்னை: கடந்த காலங்களில் சுமார் 2 சதவீத அளவுக்கு வாக்கு வங்கியை வைத்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் வெறும் 0.71 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சிபிஎம் கட்சியோ 1.02 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவிலான வாக்கு வங்கி நிலையாக இருந்து வருகிறது. இரு கட்சிகளும் சராசரியாக தலா 2 சதவீத வாக்குகளை வைத்திருப்பதாக கடந்த கால தேர்தல்கள் மூலம் தெரிய வந்தது. ஆனால் இந்தப் பலம் கூட கூட்டணிக் கட்சிகளிடமிருந்து கிடைத்த வாக்குகளை வைத்துத்தான் என்பது அவ்வப்போது இவர்கள் தனியாக போட்டியிடும்போது தெரிய வரும்.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்த இரு கட்சிகளும் 2 சதவீத வாக்குகளைப் பெறத் தவறி விட்டன. குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மிக மோசமாக செயல்பட்டு வெறும் 0.71 சதவீத வாக்குகளை மட்டுமே வாங்கியுள்ளது. சிபிஎம்மின் பங்கு 1.02 சதவீதமாகும்.
இந்த இரு கட்சிகளும் கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அப்போது சிபிஎம்முக்கு 2.4 சதவீத வாக்குகளும், சிபிஐக்கு 2 சதவீத வாக்குகளும் கிடைத்தன.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இவை வித்தியாசமான கூட்டணியை அமைத்தன. தேமுதிகவுடன் முதலில் பேசி கூட்டணி கண்டு போட்டியிட்டது சிபிஎம். ரொம்ப நாட்களாக போயஸ் கார்டன் பக்கமே தலையைத் திருப்பி வைத்துக் காத்திருந்து, எதுவும் கிடைக்காததால், வேறு வழியில்லாமல், அதேசமயம், அரைமனதோடு தேமுதிகவுடன் பேச வந்தது சிபிஐ. ஒரு வழியாக அதுவும் கூட்டணியில் இணைந்தது. ஆனால் இப்படியும் ஒரு கூட்டணியா என்று ஆச்சரியப்படும் வகையில், ஆங்காங்கு மட்டும் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவதாக பின்னர் தகவல் வெளியானது.
இப்படி அரை வேக்காட்டுத்தனமாக கூட்டணி அமைத்த சிபிஐக்கு இந்தத் தேர்தலில் வெறும் 0.71 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. அதேசமயம், சிபிஎம்முக்கு 1.02 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. இதன் மூலம் திமுக அல்லது அதிமுகவுடன் சேர்ந்தால்தான் இந்தக் கட்சிகளுக்கு முழுமையான லாபம் கிடைக்கும் என்பது தெளிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications