துணை மேயர், துணைத் தலைவர் தேர்தலிலாவது பணம் விளையாடாமல் தடுக்க வேண்டும்: பொன். ராதாகிருஷ்ணன்
மதுரை: தமிழகத்தில் நடைபெற உள்ள துணை மேயர், துணைத் தலைவர் தேர்தலில் பணம் விளையாடாமல் தடுக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் அத்வானி கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம் வரும் 27ம் தேதி மதுரையில் நடக்கிறது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், அகில இந்திய இணை பொது செயலாளர் சதீஷ் ஆகியோர் மதுரை வந்தனர்.
அப்போது பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு கவுரவமான ஓட்டுக்களை பெற்றுள்ளது. அத்துடன் நாகர்கோவிலில் நகராட்சி தலைவர் பதவியையும் கைப்பற்றியுள்ளது.
மதுரை மாநகராட்சியில் சில வார்டுகளில் குறைந்த ஓட்டுக்களில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம். இதன் மூலம் மற்ற கட்சிகளுக்கு பாஜக சளைத்தது இல்லை என நிரூப்பித்துள்ளோம்.
அதிமுக, திமுக போன்ற திராவிட கட்சிகள் எல்லாம் பணத்தை தண்ணீராக செலவு செய்து தான் தேர்தலில் வெற்றி பெற்றன. அதனால் தான் பாஜக போன்ற கட்சிகள் பாதிக்கப்பட்டது. இது குறித்து பல முறை தேர்தல் ஆணையம் கவனத்திற்கு கொண்டு சென்றும் அது கண்டுகொள்ளவில்லை.
வரும் 29ம் தேதி நடைபெற உள்ள மாநகராட்சி துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி துணை தலைவர் தேர்தலில் பணம் விளையாடாமல் தடுக்க மாநில தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த நாட்டில் ஊழலை எதிர்ப்போர் அனைவரும் மதுரைக்கு வரும் தேசிய தலைவர் அத்வானி பங்கேற்கும் கூட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications