பாமகவாக ஆதரவாக கிராமங்கள்- நகரங்களில் வாக்கு வங்கியில் பெரும் ஓட்டை!

பாமக உருவான பிறகு முதல் முறையாக 1998ம் ஆண்டு கூட்டணி அரசியலுக்குத் தாவியது. அன்று முதல் 2011 சட்டசபைத் தேர்தல் வரை திமுக அல்லது அதிமுக என மாறி மாறி சேர்ந்து போட்டியிட்டு வருகிறது அக்கட்சி. தனித்துப் போட்டியிடவே மாட்டோம் என்பதை ஒரு கொள்கையாகவே வைத்து செயல்பட்டு வந்த கட்சி பாமக.
அதிலும் கடந்த லோக்சபா தேர்தலின்போது யாருடன் கூட்டணி சேரலாம் என்பதையே கட்சி பொதுக் குழுக் கூட்டத்தில் ஓட்டெடுப்பு நடத்தி முடிவு செய்து புதிய புரட்சி படைத்த கட்சி பாமக. இப்படிக் கூட்டணி அரசியலிலேயே திளைத்துப் போன பாமக இந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. மேலும் இனிமேல் எந்தத் தேர்தலாக இருந்தாலும் திமுகவுடனும் சரி, அதிமுகவுடனும் சரி, ஏன் எந்தத் திராவிடக் கட்சியுடனும் கூட்டணி சேர மாட்டோம் என்று தடாலடியாக அறிவித்தார் டாக்டர் ராமதாஸ்.
ஆனால் இந்த உள்ளாட்சித் தேர்தலில் பாமகவின் வாக்கு வங்கி சரிந்து போய் விட்டது. கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்ட பாமக 3 எம்.எல்.ஏக்களையும், 5.2 சதவீத வாக்குகளையும் பெற்றது.
இந்த உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சிக்குக் கிடைத்துள்ள வாக்கு சதவீதம் வெறும் 3.55 சதவீதம்தான். அதில் ஊரகப்பகுதிகளான கிராமங்களில்தான் அக்கட்சிக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. அதாவது 4.63 சதவீத வாக்குகள் இங்கு பாமகவுக்குக் கிடைத்துள்ளன. நகரங்களில் மிக மோசமான வாக்குகளை அது பெற்றுள்ளது. அதாவது வெறும் 1.93 சதவீத வாக்குகளை மட்டுமே பாமக பெற்றுள்ளது.
இது பெரும் கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது. கிராமப்புற வன்னிய மக்களிடம் ஆதரவை கிட்டத்தட்ட தக்க வைத்துக் கொண்டுள்ள பாமக, நகர்ப்புற வன்னியர்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாமகவின் நிலையற்ற கொள்கை, தலைவர்களின் தடுமாற்றமான பேச்சுக்கள், தடாலடி முடிவுகள் நகர்ப்புற பாமக ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை கொடுத்துள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது.
கிராமங்களில் தித்தித்த மாம்பழம், நகரங்களில் கசந்தது ஏன் என்பதை நிச்சயம் பாமக ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்போதுதான், அடுத்த லோக்சபா தேர்தலின்போது 'பேரம்' பேச வசதியாக இருக்கும்.












Click it and Unblock the Notifications