உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை-கன மழை தொடரும்.. ஏராளமான பயிர்கள் நீரில் மூழ்கின

வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டதையடுத்து கடந்த சில தினங்களாகவே தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் தொடர் மழை காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வங்கக்கடலில் மன்னார் வளைகுடா முதல் தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதி வரை பரவியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மழை விடாமல் பெய்து வந்தது. இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தற்போது மறைந்து விட்டது.
ஆனால், வங்க கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது இலங்கை முதல் ஆந்திராவை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடல் வரை பரவியுள்ளது.
இதனால் மழை மேலும் 48 மணி நேரத்துக்கு தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை மன்னார் வளைகுடா பகுதியை நெருங்கி வரும்போது பலத்த மழை பெய்யும். அனேகமாக சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறினார்.
புதுச்சேரியில் நேற்று அதிகபட்சமாக 19 செ.மீட்டர் மழை பெய்தது. ராமநாதபுரத்தில் 16 செ.மீயும், தூத்துக்குடியில் 9 செ.மீயும், சென்னையில் 5 செ.மீயும் மழை பதிவானது.
இதனால் மாநிலத்தின் பல பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதியில் அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்கள் நீரில் மூழ்கி விட்டன. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற் பயிர்கள் நீரிழ் மூழ்கியுள்ளன.
வேதாரண்யம் உள்ளிட்ட சில பகுதிகளில் உப்பளங்கள் நீரிழ் மூழ்கிவிட்டதால், உப்பு உற்பத்தியாளர்கள் கவலையில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications