ஊழல் செய்த காங்கிரசார் வெளியே உலா வருகின்றனர்: அத்வானி குற்றசாட்டு
தென்காசி: ஊழலில் முக்கிய பங்கு வகித்த காங்கிரஸ் கட்சியினர் சுதந்திரமாக வெளியே உலா வருகின்றனர் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி பேசினார்.
பாஜ மூத்த தலைவர் அத்வானி ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிராக மக்கள் விழிப்புணர்வு ரத யாத்திரை மேற்கொண்டுள்ளார். பீகாரில் துவங்கிய யாத்திரை பல்வேறு மாநிலங்கள் வழியாக மதுரையை அடைந்தது.
நேற்று மதுரையிலிருந்து நெல்லை மாவட்டம் சிவகிரி, வாசுதேவநல்லூர், புளியங்குடி பகுதிகளுக்கு வந்தார். தென்காசி வந்த அவருக்கு பாஜகவினர் வரவேற்பு அளித்தனர்.
அப்போது அத்வானி பேசுகையில், "மத்திய அரசு ஊழலின் சாம்ராஜ்யமாக செயல்பட்டு வருகிறது.
இதனால் இதுவரை இல்லாத அளவு திகார் சிறையில் மத்திய அமைச்சர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் ஊழலில் முக்கிய பங்கு வகித்த காங்கிரஸ் கட்சியினர் வெளியே உலா வருகின்றனர். இந்த விழிப்புணர்வு பேரணிக்கு மக்களின் சக்தி ஆதரவு உள்ளது.
21ம் நூற்றாண்டிலும் வரும் 25ம் நூற்றாண்டுக்குள்ளும் நமது நாடு பெரிய அளவில் வளர்ச்சி பெறும். மேற்கத்திய நாடுகள் அதனை கண்டு ஆச்சரியப்படும் அளவுக்கு நாம் பெரிய அளவில் முன்னேறுவோம். அதற்கு நாம் 2 முக்கிய குறிக்கோள்களை அடைய வேண்டும்.
அதில் ஒன்றாக லஞ்ச ஊழலுக்கு எதிராக நாம் ஒரே அணியில் திரள வேண்டும். மற்றொன்று சுவிஸ் வங்கியில் ஊழல்வாதிகளால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும். இந்த இரண்டையும் நாம் முக்கிய குறிக்கோளாக கையில் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.
இதன்மூலம் இந்தியா வளர்ச்சி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. அனைவரும் இந்த ஊழலுக்கு எதிராக பிரசாரத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும்", என்றார்.
அத்வானி ஆங்கிலத்தில் பேசியதை முன்னாள் எம்எல்ஏ எச்.ராஜா தமிழில் மொழிப்பெயர்த்தார்.












Click it and Unblock the Notifications