மதுரை அருகே அரசுப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 50 பேர் படுகாயம்
மதுரை: மதுரை அருகே டி. கல்லுப்பட்டி அருகே பாலத்திலிரு்நது ஆற்றில் கவிழ்ந்த அரசுப் பேருந்தில் பயணம் செய்த 50 பேர் படுகாயமடைந்தனர்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து ராஜபாளையம் நோக்கி ஒரு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதில் டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
இந்த நிலையில் பேருந்து, டி. கல்லுப்பட்டி அருகே ஆறு கண் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே ஒரு இரு சக்கர வாகனம் வேகமாக வந்தது. அதன் மீது மோதி விடாமல் இருக்க டிரைவர் பேருந்தை திருப்பியுள்ளார். இருப்பினும் இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதி நிலை தடுமாறி கீழே ஆற்றில் விழுந்தது.
இதில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உடனடியாக தீயணைப்புப் படையினரும், போலீஸாரும், உள்ளூர் மக்களும் விரைந்து வந்து அவர்களை மீட்டனர். அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தால் பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.