என்ஜிஓ நிறுவனத்திடம் கூடுதலாக வசூலித்த பணத்தைத் திருப்பித் தருவதாக கிரண் பேடி கடிதம்
சமீபத்தில் கிரண் பேடி குறித்த சர்ச்சை வெடித்தது. அவர் தான் பேசச் செல்லும் இடங்களுக்கு விமான பயணம் மேற்கொள்ளும்போது, எக்கானமி கிளாஸில்தான் செல்கிறார். ஆனால் தனக்காக டிக்கெட் எடுக்கும் நிறுவனங்களிடம் பிசினஸ் கிளாஸுக்கான பணத்தை வாங்கிக் கொள்கிறார் என்று அந்த பரபரப்பு சர்ச்சை தெரிவித்தது. ஆனால் இந்தப் புகாரை கிரண் பேடி மறுத்தார்.
இந்த நிலையில் இந்தூரைச் சேர்ந்த அபியாஸ் மண்டல் என்ற தொண்டு நிறுவனம் கிரண் பேடிக்கு ஒரு கடிதம் எழுதியது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் சிவாஜி மொஹிதே கூறுகையில், கடந்த 2009ம் ஆண்டு மே 13ம் தேதி எங்களது நிறுவனத்தில் உரை நிகழ்த்த கிரண் பேடியை அழைத்திருந்தோம்.
டெல்லியிலிருந்து இந்தூருக்கு 2 நாள் வந்து செல்வதற்காக பிசினஸ் கிளாஸுக்கான டிக்கெட் கட்டணமாக ரூ. 38,871 கொடுக்கப்பட்டது. காசோலை மூலம் இதைக் கொடுத்தோம்.
சமீபத்தில் கிரண் பேடி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வந்த பத்திரிக்கைச் செய்திகளைப் படித்தவுடன், எங்களிடமிருந்து கூடுதலாக வசூலித்த பணத்தைத் திருப்பி அனுப்புமாறு கோரி அவருக்குக் கடிதம் எழுதியிருந்தோம்.
இதற்கு கிரண் பேடி பதில் மெயில் அனுப்பியுள்ளார். அதில் தனக்குக் கூடுதலாக தரப்பட்ட பணத்தைத் திருப்பித் தந்து விடுவதாக அவர் உறுதியளித்துள்ளார் என்றார்.
முன்னதாக இந்தப் புகார் குறித்து கிரண் பேடி கூறுகையில், நான் கூடுதலாக பணம் வசூலிக்கவில்லை. மாறாக, நான் பிசினஸ் கிளாஸில் பயணிப்பதாக கருதி என்னை அழைப்பவர்கள்தான் அதற்குரிய கட்டணத்தைக் கொடுக்கின்றனர். அதேசமயம், எனக்குக் கூடுதலாக தரப்படும் பணத்தை நான் வைத்துக் கொள்வதில்லை. மாறாக எனது இந்தியா விஷன் பவுண்டேஷன் அறக்கட்டளைக்காக பயன்படுத்துகிறேனே தவிர எனது சுய நலனுக்காக நான் பயன்படுத்துவதில்லை என்றார்.