டோணி, அபினவ் பிந்த்ராவுக்கு கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவி
டெல்லி: ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி ஆகியோருக்கு இந்திய ராணுவம் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவி கொடுத்து கௌரவித்துள்ளது.
துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டில் சிறந்து விளங்கும் அபினவ் பிந்த்ரா பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தார். டோணி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றது. அவரவர் விளையாட்டில் சிறந்து விளங்கும் அபினவ் பிந்த்ரா மற்றும் டோணிக்கு கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவி கொடுக்க ராணுவம் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் அனுமதி கோரியது.
அவர் கடந்த செப்டம்பர் மாதம் 13ம் தேதி அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று நடந்த ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் ராணுவ தளபதி ஜெனரல் வி. கே. சிங் டோணி மற்றும் பிந்த்ராவுக்கு கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவிக்கான பதக்கத்தை அளித்தார்.
ஏற்கனவே கபில் தேவ் ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னலாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் மோகன்லாலும் கூட இதே போல கெளரவிக்கப்பட்டார்.
இந்த கெளரவ ராணுவப் பதவி குறித்து டோணி கூறியதாவது,
இது சாதாரண பதவி அன்று. நான் விரைவில் எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களை சந்தித்து பேசுவேன். ராணுவத்தில் சேருமாறு இளைஞர்களை ஊக்குவிப்பேன். ராணுவத்தில் சேர வேண்டும் என்று நான் சிறு வயதில் இருந்தே கனவு கண்டேன். அந்த கனவு இன்று நனவாகியுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications