கூடங்குளம் விவகாரம்: தமிழக அரசு குழுவில் 2 மக்கள் இயக்கத்தினர்
நெல்லை: கூடங்குளம் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அமைக்கவிருக்கும் குழுவில் மக்கள் இயக்கம் சார்பில் 2 பேர் இடம்பெறுகின்றனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி அப்பகுதி மக்கள் இன்றுடன் 16வது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கூடங்குளம் மக்களின் அச்சத்தைப் போக்க மத்திய அரசு நியமித்த 15 பேர் கொண்ட குழுவில் மாநில அரசின் சார்பிலும், போராட்டக்குழுவின் சார்பிலும் யாரும் இடம்பெறாததால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளும்வரை மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்றும் போராட்டக்குழுவினர் தெரிவித்தனர். நேற்று உண்ணாவிரதப் பந்தலில் தொட்டில் கட்டி அதில் பச்சிளம்குழந்தைகளைப் போட்டு போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அணுமின் நிலைய்ததிற்கு எதிராகப் போராடும் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்ளிட்ட போராட்டக்குழுவினர் நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியர் செல்வராஜை சந்தித்து பேசினர்.
கூடங்குளம் பிரச்சனைக்கு தீர்வு காண தமிழக அரசு ஒரு குழுவை அமைக்கவிருப்பதாகவும், அதில் போராட்டக்குழுவின் சார்பில் 2 பேர் தேர்வு செய்யப்படவிருப்பதாகவும் செல்வராஜ் தெரிவித்தார்.
தமிழக அரசின் குழுவில் இடம்பெற மக்கள் இயக்கம் சார்பில் சார்பில் அம்பை பங்கு தந்தை ஜேசுராஜ், கடலோர மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் புஷ்பராயன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications