திமுக முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமியின் தம்பிகள் குண்டர் சட்டத்தில் கைது
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமியின் தம்பிகள் சங்கர், சொக்கலிங்கம் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2006ம் ஆண்டு திருவொற்றியூரைச் சேர்ந்த செல்லத்துரை என்ற மீனவர் கொல்லப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கே.பி.பி. சாமியின் தம்பி கே.பி.பி. சங்கர்(38) சென்னை மாநகராட்சியின் 5வது வார்டு கவுன்சிலராக உள்ளார். மீனவர் செல்லத்துரை கொலை வழக்கிலும், வேலு என்ற மீனவர் கடத்தப்பட்ட வழக்கிலும் சங்கருக்கு தொடர்பு இருப்பதால் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர் மீது இந்த வழக்குகள் தவிர எண்ணூரைச் சேர்ந்த ஒருவரைக் கொல்ல முயன்ற வழக்கு, திருவொற்றியூரைச் சேர்ந்த ஒருவரின் நிலத்தை அபகரித்த வழக்கு போன்ற வழக்குள் உள்ளன. எனவே, சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதி அளிக்குமாறு திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் கேட்டுக் கொண்டார்.
கே.பி.பி.சங்கரையும், அதே வழக்குகளில் தொடர்புடைய அவரது தம்பி கே.பி.பி. சொக்கலிங்கத்தையும் 1 ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்குமாறு கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார்.
இதையடுத்து சங்கர் மற்றும் சொக்கலிங்கம் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications