61வது ஆண்டாக 100 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 100 அடியை எட்டியது. 61வது ஆண்டாக மேட்டூர் அணை 100 அடியைத் தாண்டியுள்ளது.
தமிழகத்தின் முக்கிய அணை ஸ்டான்லி அணை எனப்படும் மேட்டூர் அணையாகும். காவிரி டெல்டாப் பாசனப் பகுதி விவசாயிகளின் உயிர்நாடி இந்த அணை. காவிரியிலிருந்து வரும் நீர் இங்கு இருப்பு வைத்து பாசனத்திற்கும், மின் உற்பத்திக்கும், குடிநீர் விநியோகத்திற்கும் உபயோகிக்கப்படுகிறது.
கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து அங்கிருந்து அபரி்மிதமாக நீர் வந்தால்தான் மேட்டூர் அணை நிரம்பும். இந்த ஆண்டு வட கிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதாலும், கர்நாடகத்திலிருந்து பெருமளவில் தண்ணீர் வருவதாலும் மேட்டூர் அணை 100 அடியைத் தொட்டு விட்டது.
இன்று காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 40,521 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இதே நிலை தொடர்நது நீடித்தால் அணை முழுமையாக நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்ட அளவு 120 அடியாகும். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில்தான் மேட்டூர் அணை 100 அடியைத் தொட்டது. இந்த ஆண்டும் இதே காலகட்டத்தில் 100 அடியைத் தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications