2 மாஜி அமைச்சர்களின் கட்சிப் பதவிகளையும் பறித்தார் ஜெ.- உதயக்குமார் பதவியும் பறிப்பு
செருப்பை மட்டுமே தவிர்த்து வந்த உதயக்குமார், தனது ஆடம்பரப் போக்கை தவிர்க்காத காரணத்தால்தான் இந்த கதிக்கு ஆளாகியுள்ளதாக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
சமீபத்தில் 6 அமைச்சர்களை அமைச்சரவையிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா. அவர்களில் ஒருவர் ஆர்.பி. உதயக்குமார். அதிமுக மாணவர் அணி செயலாளராக இருந்து வந்த உதயக்குமார், ஜெயலலிதா அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தார்.
ஜெயலலிதா மீது கொண்ட பக்தியால் அவர் இருக்கும் இடம் கோவில் என்று கூறி செருப்பு கூட போடாமல் நடமாடி வந்து அனைவரையும் கவர்ந்தார் உதயக்குமார். ஆனால் அதைக் கண்டித்த ஜெயலலிதா, அமைச்சருக்கென்று ஒரு கெளரவம் உள்ளது. எனவே இனிமேலும் செருப்பு போடாமல் நடமாடக் கூடாது என்று அறிவுரை வழங்கினார்.
இந்த நிலையில் சமீபத்தில் அமைச்சர் பதவியை இழந்த உதயக்குமார் இன்று தனது கட்சிப் பதவியையும் பறி கொடுத்துள்ளார். அவரிடமிருந்து மாணவர் அணி செயலாளர் பதவியைப் பறித்துள்ள ஜெயலலிதா, அப்பதவிக்கு சரவணப்பெருமாளை நியமித்துள்ளார்.
இதேபோல சமீபத்தில் பதவியிழந்த முன்னாள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.