திருமணம் நிச்சயிக்கப்பட்ட 2 நாளில் ராணுவ வீரர் பரிதாப சாவு
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட ராணுவ வீரர் நிச்சயமான 2 நாளிலேயே மரணமடைந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் அருகே உள்ள புல்லிவிலையை சேர்ந்தவர் சுயம்புலிங்கசாமி. இவரது மகன் மணிகண்டன். இவர் சிக்கிம் மாநிலத்தில் ராணுவ வீரராக இருந்தார். இவருக்கு பெற்றோர்கள் தென்தாமரைகுளம் அடுத்த ஈச்சவிளை அருகே உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து கடந்த 4ம் தேதி திருமண நிச்சயர்த்த நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக மணிகண்டன் கடந்த 3ம் தேதி சிக்கிமிலிருந்து ஊருக்கு வந்தார்.
அப்போது அவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். பின்னர் பெரியோர்கள் முடிவு செய்தது போல் மணிகண்டனுக்கும், ஈச்சவிளையை சேர்ந்த அந்த பெண்ணுக்கும் நிச்சயர்த்தம் நடந்தது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட அன்று மாலை மணிகண்டன் உடல் நிலை மோசமானது. உடனே அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிக்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். திருமணம் நிச்சயிக்கப்பட்ட 2 நாளில் ராணுவ வீரர் இறந்ததால் இரு வீட்டாரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இதுகுறித்து சுசீந்தரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.