22ம் தேதி பெங்களூர் கோர்ட்டில் ஆஜராகிறார் ஜெ.- தேவைப்பட்டால் 23ம் தேதியும் ஆஜராவார்

பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான ரூ. 66 கோடி சொத்துக் குவிப்பு வழக்கு பல வருடங்களாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் ஜெயலலிதா ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூடிய உத்தரவைப் பிறப்பித்ததைத் தொடர்ந்து அக்டோபர் 20, 21 ஆகிய இரு தினங்கள் அவர்கள் பெங்களூர் அருகே பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அவரிடம் மேலும் பல கேள்விகள் கேட்கப்பட வேண்டியிருப்பதால் நவம்பர் 8ம்தேதி அவர் மீண்டும் ஆஜராக வேண்டும் என நீதிபதி மல்லிகார்ஜூனய்யா உத்தரவிட்டார். ஆனால் இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் ஜெயலலிதா. இருப்பினும் விசாரணை முடியும்வரை கோர்ட்டுக்குப் போயாக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறி விட்டது. ஒரு வேளை நவம்பர்8ம்தேதி போக முடியாவிட்டால் வேறு ஒரு தேதிக்குப் போகலாம் அதுகுறித்து பெங்களூர் கோர்ட்டை நாடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் பெங்களூர் கோர்ட்டில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி ஜெயலலிதா வரவில்லை. அதேசமயம், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஆஜரானார்கள்.
அப்போது ஜெயலலிதாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் குமார் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், இன்று பல்வேறு காரணங்களால் முதல்வர் ஜெயலலிதாவால் கோர்ட்டில்நேரில் ஆஜராக முடியவில்லை. வரும் 22ம் தேதி அவர் ஆஜராகத் தயாராக இருக்கிறார். தேவைப்பட்டால் 23ம் தேதியும் அவர் ஆஜராகத் தயார் என்று தெரிவித்தார் குமார்.
இதை ஏற்ற நீதிபதி மல்லிகார்ஜூனய்யா 22ம் தேதி ஜெயலலிதா ஆஜராக உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications