50 கிங்பிஷர் விமானங்கள் திடீர் ரத்து.. பயணிகளை விமான நிலையங்களில் தவிக்க விட்ட விஜய் மல்லையா!

Subscribe to Oneindia Tamil

Vijay Mallya
டெல்லி: கடும் நிதிப் பற்றாக்குறையில் சிக்கியுள்ளதாகக் கூறி வரும் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நாடு முழுவதும் 50 விமான சர்வீஸ்களை முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென ரத்து செய்து பயணிகளை தவிக்கவிட்டுள்ளது.

வரும் 19ம் தேதி வரை தொடர்ந்து மேலும் ஏராளமான சர்வீஸ்கள் ரத்து செய்யப்படவுள்ளதாகவும் கிங்பிஷர் அறிவித்துள்ளது.

லாபமோ நஷ்டமோ, ஏர் டெக்கான் என்ற குறைந்த கட்டண விமான சேவையை நடத்தி வந்தார் கேப்டன் கோபிநாத். அதையும் வாங்கிப் போட்ட மல்லையா, குறைந்த கட்டண சேவையை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்தார். இப்போது கிங்பிஷர் விமான சேவையில் கட்டணம் மிக மிக அதிகம்.

இருந்தாலும் பிரீமியம் சர்வீஸ் என்பதால், கேட்ட காசைக் கொடுத்துவிட்டு ஏராளமானோர் அதில் பயணித்து வருகின்றனர்.

இந் நிலையில் கிங்பிஷர் கடும் நஷ்டத்திலும் நிதிப் பற்றாக்குறையிலும் சிக்கியுள்ளதாகக் கூறிக் கொண்டு, அவ்வப்போது திடீரென சில விமானங்களை ரத்து செய்து வந்தனர். நேற்று அதிரடியாக ஒரே நாளில் 50 விமானங்களை ரத்து செய்துவிட்டனர். இதில் பெரும்பாலானவை உள்நாட்டு விமானங்கள், சில வெளிநாட்டு விமானங்கள்.

சொல்லாமல் கொள்ளாமல் திடீரென விமானங்களை ரத்து செய்ததால் ஆயிரக்கணக்கான பயணிகள் நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் பெரும் அவதிக்குள்ளாயினர். பலர் வாக்குவாதத்திலும் இறங்கினர். ஆனால், அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை.

இந் நிலையில், திடீரென இப்படி மொத்தமாக விமானங்களை ரத்து செய்தது என்று கேட்டு கிங்பிஷர் நிறுவனத்துக்கு இந்திய விமான சேவை டைரக்டர் ஜெனரல் அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், இந்த நோட்டீஸ் அனுப்புதல் எல்லாம் சும்மா கண்துடைப்பே என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு கிங்பிஷர் தரும் பதில் கடிதத்தை வாங்கி பைலில் போட்டுவிட்டு சும்மா தான் இருக்கப் போகிறது டைரக்டர் ஜெனரல் அலுவலகம். கடும் நடவடிக்கை ஏதும் எடுக்க வாய்ப்பில்லை.

ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான கட்டணங்களை பயணிகளுக்குத் திருப்பித் தர வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் டைரக்டர் ஜெனரல் அலுவலகம் வலியுறுத்தும் என்று தெரிகிறது.

கடந்த மாதம் விமானத்துறை அதிகாரிகளையும் நிதித்துறை அதிகாரிகளையும் சந்தித்த விஜய் மல்லையா, கட்டணங்களை மேலும் உயர்த்த அனுமதி கோரினார். ஏர் இந்தியாவுக்கு அரசின் உதவி கிடைப்பதால் தப்பித்துக் கொள்கிறது. ஆனால், தனியார் விமான நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தை சந்திப்பதால் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்.

இந் நிலையில் அடுத்த 4 மாதங்களில் கிங்பிஷரின் குறைந்த கட்டண சேவையான கிங்பிஷர் ரெட் முழுவதுமாக மூடப்படவுள்ளதாம்.

கடந்த 2005ம் ஆண்டு தொடங்கப்பட்ட கிங்பிஷர் நிறுவனம் இன்று வரை லாபம் ஈட்டியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் 31ம் தேதி வரை இந்த நிறுவனம் அடைந்துள்ள நஷ்டம் ரூ. 7,057.08 கோடி என்கிறார் மல்லையா. கடந்த ஓராண்டில் மட்டும் ரூ. 1,027 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாம்.

இதைக் காரணம் காட்டி மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களுக்கு விமான எரிபொருளுக்கான கட்டணங்களை கிங்பிஷர் உரிய நேரத்தில் செலுத்துவதில்லை என்பதும், ஊழியர்களுக்கு ஊதியமும் தாமதமாகவே வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனத்தின் 23.2 சதவீத பங்குகளை ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ உள்ளிட்ட 13 வங்கிகள் வாங்கின. இதில் ஸ்டேட் வங்கியிடம் 5.7 சதவீத பங்குகளும் ஐசிஐசிஐ வங்கியிடம் 5.3 சதவீத பங்குகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 7 மாதத்தில் இந்த நிறுவனத்தின் பங்குகள் விலை மதிப்பு 67 சதவீதம் அளவுக்கு சரிந்துவிட்டது. இதனால், இதில் முதலீடு செய்த வங்கிகளின் பணமும் பங்குச் சந்தையிலேய கரைந்துவிட்டது.

இந்திய விமான சேவையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு அடுத்தபடியாக மிக அதிகமானோர் பயணிக்கும் தனியார் விமான நிறுவனம் கிங்பிஷர் தான். மொத்த பயணிகளில் 26 சதவீதம் பேர் ஜெட் ஏர்வேஸையும் 20 சதவீதம் பேர் கிங்பிஷரையும் பயன்படுத்தி வருகின்றனர்.

தினமும் 325 விமான சர்வீஸ்களை நடத்தி வருகிறது கிங்பிஷர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+