துருக்கியில் நிலநடுக்கம்: 7 பேர் பலி, 25 பேர் காயம்- மீட்புப் பணி தீவிரம்
துருக்கி: துருக்கியில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 7 பேர் பலியாகினர். 25 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
துருக்கி நாட்டின் வேன் நகரில் நேற்று இரவு 9.23 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் 25 கட்டிடங்கள் தரைமட்டமானது. இதில் 2 ஹோட்டல்கள், ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் மட்டுமே மக்கள் இருந்தனர். மீதமுள்ள 23 கட்டிடங்கள் காலியாக இருந்தன. இந்த சம்பவத்தில் இடிந்து விழுந்த பேராம் ஹோட்டலில் அதிகளவில் பத்திரிக்கையாளர்கள் தங்கி இருந்தனர்.
கடந்த மாதம் இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த செய்திகளை திரட்டும் பணியில் ஹோட்டலில் தங்கியிருந்த பத்திரிக்கையாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இடிபாடுகளில் சிக்கி 7 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்புக் குழுவினர் இரவுப் பகலாக தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தில் 600க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications