தூத்துக்குடியில் 59 பைக்குகள் ஏற்றி வந்த லாரி கடத்தல்: லாரியும், பைக்குகளும் மீட்பு
தூத்துக்குடி: ஹரியானாவில் இருந்து தூத்துக்குடிக்கு பைக்குகள் ஏற்றி வந்த லாரி குறுக்கு சாலை சுங்கச்சாவடி அருகில் கடத்தப்பட்டது.
தூத்துக்குடியிலுள்ள தனியார் பைக் ஷோரூமுக்கு ஹரியானா மாநிலத்தில் இருந்து 59 பைக்குகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. இதை கிவேந்தர் என்பவர் ஓட்டி வந்தார்.
நேற்றிரவு குறுக்கு சாலை சுங்கச்சாவடியை தாண்டி லாரி வந்தபோது 4 பேர் லாரியை மறித்தனர். அதன் பிறகு டிரைவரை தாக்கி கீழே தள்ளிவிட்டு அவர்கள் லாரியை கடத்திச் சென்றனர்.
இது குறித்து புதியம்புத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று காலை கடத்தப்பட்ட லாரி தூத்துக்குடி பைபாஸ் சாலையில் நின்று கொண்டிருப்பது தெரிய வந்தது. போலீசார் அதை மீட்டனர். லாரியில் இருந்த பைக்குகள் எதுவும் திருட்டுப் போகவில்லை.
எதற்காக மர்ம நபர்கள் லாரியை கடத்தினார்கள் என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.