ஆள்மாறாட்ட அமைச்சர் பதவிநீக்கம் - முதல்வர் ரங்கசாமி பரிந்துரை
புதுச்சேரி : 10 ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறட்டம் செய்த புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாண சுந்தரத்தை பதவி நீக்க முதல்வர் ரங்கசாமி ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளார்.
புதுவை கல்வி, போக்குவரத்து அமைச்சராக இருப்பவர் கல்யாணசுந்தரம்.
திண்டிவனம் தாகூர் மெட்ரிக் பள்ளியில் கடந்த அக்டோபர் மாதம் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட 10ம் வகுப்பு தேர்வு எழுதினார்.
அப்போது, அவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குப்புசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் மீது ஆள்மாறாட்டம், மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட 8 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்யாணசுந்தரம் மனுதாக்கல் செய்தார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன்மீது பொய்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக கூறியிருந்தார்.
இதையடுத்து இவ்வழக்கில் அமைச்சரை கைது செய்ய உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. வாதங்கள் இறுதிகட்டத்தை எட்டிய நிலையில், அமைச்சர் மீதான முன்ஜாமீன் மனுவை நீதிபதி பழனிவேலு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் கைதாவது உறுதியானது. இந்த நிலையில் அவர் மீண்டும் தலைமறைவானார்.
கல்வி அமைச்சரே ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வந்தன.
இந்தநிலையில் அமைச்சர் கல்யாண சுந்தரத்தை பதவி நீக்கம் செய்ய துணை நிலை ஆளுநருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பரிந்துரைத்துள்ளார். தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக எழுந்த புகாரினை அடுத்து இந் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications