சென்னையி்ல் திருட்டுப் போன ரூ.3 கோடி மதிப்புள்ள பொருட்கள் ஒப்படைப்பு
சென்னை: சென்னையில் திருட்டு போன ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்கள் போலீசாரால் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
சென்னையி்ல் ரோந்து மற்றும் வாகன சோதனை பணிகளை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இதன்மூலம் கொள்ளை, திருட்டு வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு சிறையி்ல் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்கள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதி கூறியதாவது,
சென்னையி்ல் போலீஸ் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் கடந்த 2 மாதத்தில் 236 வழக்குகளில் தொடர்புடைய 170 குற்றவாளிகளை கைதாகி உள்ளனர். இதில் 71 பேர் செயின் பறிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள். குற்றவாளிகளிடம் இருந்து திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 1,005 பவுன் தங்க நகைகள், 9 கிலோ வெள்ளி, ரூ.17 லட்சம் ரொக்கப்பணம், 5 கார், 7 மோட்டார் சைக்கிள் உட்பட ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லியை சேர்ந்த உசேன், குலாம், புதுப்பேட்டையை சேர்ந்த நாகராஜ், சம்சுதீன், சரவணன், வினோத், கார்த்திக், பிரபு ஆகியோர் செயின் பறிப்பு கொள்ளை சம்பவங்களில் முக்கிய குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டுள்ளனர். 26 இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட 21 பேரும், 45 வீடுகளில் பூட்டை உடைத்து திருடிய 32 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையி்ல் நான் கமிஷனராக பொறுப்பேற்ற பிறகு 500 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். சென்னையில் நடந்த பெரிய குற்றங்கள் குறித்து விசாரிக்க, மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சிறப்பு படை அமைக்கும் திட்டம் அரசு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அந்த திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் நிறைவேற்றப்படும்.
போக்குவரத்து போலீசார் இ-செலான் முறையில் அபராதம் வசூலித்து வருகின்றனர். இந்த முறையில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை ரூ.6 கோடியே 40 லட்சம் வசூலித்துள்ளனர். போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் மோசடியி்ல் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையி்ல் பெய்த தொடர் மழையில் சேதமடைந்துள்ள போலீஸ் நிலையங்களும், போலீஸ் குடியிருப்புகளும் விரைவில் பழுது பார்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டிட பணி இன்னும் 2 மாதத்தில் முடிந்துவிடும், என்றார்.
சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள ஜெயா காலனியை சேர்ந்த நரிக்குறவர்களான சிரஞ்சீவி, வெங்கடேஷ், பானுமதி, பெஞ்சாலம்மாள் ஆகிய 4 பேர் வீட்டில் இருந்து, கொள்ளையடிக்கப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்புள்ள 11 சவரன் தங்க நகை, 2 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications