முதல் நாள் மாநாட்டிலேயே முதல்வரிடம் கருத்து தெரிவித்து கலெக்டர்கள், காவல் அதிகாரிகள் சாதனை!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்த கலெக்டர்கள் மற்றும் எஸ்.பிக்கள் மாநாட்டின் தொடக்க நாளிலேயே அத்தனை பேரும் கருத்து தெரிவித்து புதிய சாதனை செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு நிலை குறித்து விவாதிக்கவும் அரசின் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதை திறனாய்வு செய்யும் வகையிலும், மக்களின் தேவைக்கேற்ப திட்டங்களில் மாற்றங்கள் தேவையா என்பதை ஆராயும் வகையிலும், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டினை முதல்வர் ஜெயலலிதா நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய இரு நாட்களில் நடத்த உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி, 13.11.2011 அன்று மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஒருங்கிணைந்த மாநாடு, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர், அரசுத்துறை செயலாளர்கள், துறைத்தலைவர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதல்வர் ஜெயலலிதா இந்த மாநாட்டினை துவக்கி வைத்து துவக்க உரை ஆற்றியபின், அனைத்து மாவட்டங்களின் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் காவல்துறை ஆணையர்கள் ஆகியோர் தங்களது மாவட்ட பிரச்சினைகள் குறித்தும், மாவட்டத்தில் சட்டம் ஓழுங்கு நிலைமை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.
மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த ஒருங்கிணைந்த கூட்டம் நேற்று காலை 10.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற்றது. ஒருங்கிணைந்த இந்த கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கு, உள்நாட்டு பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு, மதுவிலக்கு அமலாக்கம், நில அபகரிப்பு வழக்குகள், இலங்கை அகதிகள் முகாம், மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்புச்) சட்ட அமலாக்கம், தடுப்புக் காவல், முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள் மீதான நடவடிக்கை ஆகியவை குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் காவல்துறை ஆணையர்கள் அனைவரும் தங்கள் கருத்துக்களை எடுத்து கூறுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த ஒருங்கிணைந்த கூட்டத்தில் எல்லா மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், காவல்துறை ஆணையர்கள் ஆகியோரின் கருத்துகள் இன்றே முழுமையாக தெரிவிக்கப்பட்டது ஒரு சாதனையாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இன்றும் தொடர்கிறது மாநாடு
நேற்று கூட்டுக் கூட்டமாக மாநாட்டின் தொடக்க விழா நடைபெற்றது. இன்றும் 2வது நாளாக மாநாடு தொடர்ந்து நடைபெறுகிறது. காலையில் கலெக்டர்கள் மாநாடு நடைபெறும். பிற்பகலில் காவல் அதிகாரிகளின் மாநாடு நடைபெறும்.












Click it and Unblock the Notifications