சங்ககிரி அருகே மூதாட்டி அடித்துக் கொலை: ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை, ரூ.10,000 ரொக்கம் கொள்ளை
சங்ககிரி: சங்ககிரி அருகே ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை அடித்துக் கொலை செய்துவிட்டு ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை, 10,000 ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மக் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், தங்காயூரை அடுத்த பாசபாலிகாடு பகுதியைச் சேர்ந்தவர் காளியம்மாள்(70). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் பழனிசாமி இறந்துவிட்டார். அவரது மகன்கள் ராஜகோபாலன், சின்னசாமி ஆகியோர் திருமணமாகி சங்ககிரியில் தனியாக வசித்து வருகின்றனர்.
அவர்களுக்கு சொந்தமான 8 ஏக்கர் விவசாய நிலத்தை தங்காயூரைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் மற்றும் பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலத்தின் நடுவே உள்ள ஓட்டு வீ்ட்டில் காளியம்மாள் தனியாக வசித்து வந்தார். தினமும் காலையில் குத்தகை நிலத்துக்கு வரும் மாணிக்கம் மாலையில் தான் வீடு திரும்புவார்.
இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு மாணிக்கம் வழக்கம் போல பால் கறக்க வந்தார். காளியம்மாளின் வீ்ட்டுக் கதவை தட்டியபோது அது தானாக திறந்து கொண்டது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது காளியம்மாள் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.
இது குறித்து மாணிக்கம், காளியம்மாளின் மகன் சின்னசாமிக்கு தகவல் கொடுத்தார். சின்னசாமி வந்து பார்த்த போது, காளியம்மாள் அணிந்திருந்த 9 பவுன் தங்க சங்கிலி, 2 தங்க வளையல்கள், 2 மோதிரங்கள் உட்பட ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகளும், பீரோவில் வைத்திருந்த ரூ.10,000 ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. வீ்ட்டின் ஓடுகளைப் பிரித்து வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர்கள் காளியம்மாளை தாக்கி கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications