வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்- ஒருவர் கைது
வேதாரண்யம்: நாகை மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்பிலான போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம் வேதாராண்யத்தை அடுத்த தேத்தாக்குடியில் வசிப்பவர் ஆல்பர்ட் குரூஸ்(36). இலங்கையில் இருந்து அகதியாக வந்த இவர் தேத்தாக்குடியைச் சேர்ந்த அமுதா(28) என்பவரை திருமணம் செய்து கொண்டு இந்திய குடியுரிமை பெற்றார். அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
ஆல்பர்ட் குரூஸின் வீட்டில் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் அவரது வீட்டில் இருந்த 885 கிராம் ஹெராயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 கோடி என்று கூறப்படுகிறது.
போதைப் பொருளை வீட்டில் பதுக்கி வைத்த குற்றத்திற்காக ஆல்பர்ட் குரூஸை போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையி்ல் போதைப் பொருள் ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வந்ததும், வேதாராண்யத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டுருந்ததும் தெரிய வந்தது.
கோவை, சென்னையைச் சேர்ந்த இலங்கை வாலிபர்கள் ஆல்பர்ட் குரூஸை அடிக்கடி சந்தித்து சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது. எனவே போதைப் பொருள் கடத்தலின் பின்னணியில் உள்ள கும்பல் குறித்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.