மரிய வில்சன் கைக்கு போன நிதித் துறை! விஜய்யிடம் வருவாய் துறையை கேட்டாரா? செங்கோட்டையன் விளக்கம்
சென்னை: நிதித் துறை இலாகா மாற்றப்பட்டு வருவாய் துறை கொடுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.
தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற மே 10 ஆம் தேதி, கட்சியின் உயர்மட்டக் குழு ஒருங்கிணைப்பாளரும், 10 முறை சட்டசபை உறுப்பினருமான மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு நிதித்துறை வழங்கப்பட்டது.

அரசின் வருவாய், நிதித் திட்டங்கள் மற்றும் முக்கிய பொருளாதார முடிவுகள் தொடர்பான பொறுப்புகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
மே 21 அன்று அமைச்சரவை விரிவாக்கத்தை அடுத்து, நிதியமைச்சராக நியமனம் செய்யப்பட்ட செங்கோட்டையன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்த நிதியமைச்சர் பதவி, புதிய அமைச்சராக பதவியேற்ற மரிய வில்சனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏவான மரிய வில்சன், நிதி, ஓய்வூதியம் மற்றும் திட்டமிடல் துறைகளை பொறுப்பேற்கிறார். செங்கோட்டையனோ, வருவாய் துறை, மாவட்ட வருவாய் நிறுவல், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்கிறார்.
இதனால் சீனியரான செங்கோட்டையனிடம் நிதித் துறை இருப்பதுதானே நல்லது. அப்படியிருக்கும் போது கொடுக்கப்பட்ட துறையை எதற்காக விஜய் மாற்றினார்? செங்கோட்டையனுக்கு அவ்வளவுதான் முக்கியத்துவமா, மாற்றுவதென்றால் மற்றவர்களின் துறைகளை வாங்கி மரியவில்சனுக்கு கொடுக்க வேண்டியதுதானே என்றெல்லாம் பேசப்பட்டன.
இந்த மாற்றத்தின் பின்னணியில் இருவேறு அரசியல் பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன. நிதி போன்ற முக்கியத் துறையை மரிய வில்சன் போன்ற புதிய, இளம், கார்ப்பரேட் மேலாண்மைத் திறன் கொண்டவரிடம் ஒப்படைத்து நிர்வாகத்தில் புதுமையைப் புகுத்த விஜய் விரும்புகிறாராம் என்று ஒரு தரப்பு கூறுகிறது.
மறுதரப்பில், தமிழகத்தின் ஒவ்வொரு கிராமப்புறப் பகுதிகளையும், அடிமட்ட நிர்வாக அமைப்புகளையும் விரல் நுனியில் வைத்துள்ள செங்கோட்டையன், வருவாய்த்துறையை மிகச் சிறப்பாக வழிநடத்த முடியும் என விஜய் கணக்கு போட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து செங்கோட்டையனே விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், நிதித் துறை அமைச்சராக இருந்தால் சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்ற நடைமுறை கட்டாயம் உள்ளது. நான் மக்களோடு நேரடியாகப் பணியாற்றக்கூடிய துறையை விரும்பி கேட்டேன். அதன்படி முதலமைச்சர் விஜய், எனக்கு வருவாய் துறையை ஒதுக்கீடு செய்தார் என்று செங்கோட்டையன் விளக்கினார்.
மூத்த வழக்கறிஞரும் தவெக முக்கிய நிர்வாகியுமான மரிய வில்சன் புதிய நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். ஜேப்பியாரின் மருமகன் என்று அடையாளப்படுத்தப்படும் இவர், ஆர்.கே. நகர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
மே 21 அன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில் 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். இதில் காங்கிரஸின் 2 அமைச்சர்களும் அடங்குவர். முன்னர் மே 10-ஆம் தேதி அன்று முதலமைச்சருடன் 9 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், இன்று விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் சார்பில் அமைச்சரவையில் இணைந்த நிலையில் அமைச்சரவையில் 35 பேர் இடம்பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications