கவுன்சிலர், ஒன்றியச் செயலாளர் மதிமுகவில் இருந்து நீக்கம்: வைகோ அதிரடி
சென்னை: கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகக் கூறி கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ருத்ரன், தூத்துக்குடியைச் சேர்ந்த கணேசன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ருத்ரன் கட்சியின் கட்டுபாட்டை மீறி கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால் மதிமுக அடிப்படை பொறுப்பு உட்பட அவர் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
அதேபோல தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஒன்றியக் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட செட்டிக்குறிச்சி, சிதம்பரம்பட்டி கணேசன் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடந்ததால் அவர் கழக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.