காந்தி வேடத்தில் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து பாதுகாப்பு கேட்ட ஆட்டோ டிரைவர்
சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு காந்தி வேடத்தில் வந்து பாதுகாப்பு கேட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநரை போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
சென்னையைச் சேர்ந்தவர் சக்திவேல். ஆட்டோ டிரைவர். அவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். காந்தியவாதி அன்னா ஹசாரேவின் போராட்டங்களால் கவரப்பட்ட சக்திவேல், அவருக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த சக்திவேல், தனக்கு காந்தியின் ஆவி வந்துவிட்டதாகவும், அன்னா ஹசாரேவை நேரில் சந்திக்கப் போவதாகவும் கூறினார். மேலும் இந்தியாவின் அடுத்த பிரதமர் நான் தான் என்றும், இதற்காக புதிய கட்சி துவங்க உள்ளதால் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறும் கூறினார்.
இதற்காக மகாத்மா காந்தியை போல வேட்டி, துண்டு அணிந்து கொண்டு, கண்ணாடியும், கையில் தடியும் வைத்திருந்தார். அவரை அழைத்துச் சென்று விசாரித்த போலீசார், பின்னர் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.