விமானத்துறையில் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிக்க வேண்டும்-மல்லையா
மும்பை: இந்திய விமானத்துறையில் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என மூழ்கிக் கொண்டிருக்கும் கிங்பிஷர் விமான நிறுவன அதிபரான விஜய் மல்லையா கோரிக்கை விடுத்துள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில், இந்தியாவில் விமானப் போக்குவரத்துத்துறை கடும் நெருக்கடியில் உள்ளது. ஏர் இந்தியாவைப் போல நஷ்டம் ஏற்படுத்தும் ரூட்களில் எங்களால் விமானங்களை இயக்க முடியாது. இந்தியாவில் விமான நிலையங்களை அமைக்க வெளிநாட்டு விமானத்துறையினரின் முதலீடுகளை அனுமதிக்கிறோம். அதே போல விமானத்துறையிலும் 100 சதவீத வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்க வேண்டும்.
அதே போல விமானங்களுக்கான எரிபொருளை நாங்களே நேரடியாக இறக்குமதி செய்து கொள்ளவும் அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரியுள்ளோம். நிறுவனத்தைக் காப்பாற்ற மத்திய அரசிடம் நிதியுதவி ஏதும் கோரவில்லை. மக்களின் வரிப்பணத்தை எங்களுக்குத் தர வேண்டிய அவசியமில்லை.
2011ம் ஆண்டில் கிங்பிஷர் ரூ. 800 கோடியளவுக்கு கடன் வாங்கியது. அதைத் திருப்பிச் செலுத்த கால அவகாசம் உள்ளது. கிங்பிஷர் விமான நிறுவனத்தை மூடும் திட்டம் ஏதும் இல்லை, எங்களை விட இருமடங்கு கடன் வைத்துள்ள விமான நிறுவனங்கள் எல்லாம் இந்தியாவில் உள்ளன.
குறைந்த கட்டண விமானப் போக்குவரத்து நிறுவன பிரிவை நாங்கள் மூடுவதில் தவறே இல்லை. எங்களது நிறுவனத்தில் பெரிய அளவில் பணியாளர்களை நீக்கும் திட்டம் ஏதும் இல்லை. ஆனால், செலவைக் குறைக்க சில நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம். கிங்பிஷரில் முதலீடு செய்ய சில முதலீட்டாளர்கள் முன் வந்துள்ளனர் என்றார் மல்லையா.
ஒன்வோர்ல்ட் நெட்வொர்க்கில் இணையும் கிங்பிஷர்:
இந் நிலையில் கிங்பிஷரின் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் அகர்வால் நிருபர்களிடம் பேசுகையில், அடுத்த ஆண்டில் கிங்பிஷர் ஒன்வோர்ல்ட் ஏர்லைன் அலையன்ஸ் அமைப்பில் சேரும் என்றார் (இந்த அமைப்பில் உள்ள கேத்தே பசிபிக், அமெரிக்கன் ஏர்லைன்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஆகியவை தேவை ஏற்படும்போது அடுத்த நிறுவனத்தின் ரூட்களையும் விமானங்களையும் பயன்படுத்திக் கொள்வது உண்டு)












Click it and Unblock the Notifications