பெட்ரோல் விலையை குறைக்க மானியம் அளிக்க முடியாது! - மன்மோகன்சிங்

இதன் மூலம் பெட்ரோல் விலைக் குறைப்புக்கு சாத்தியமே இல்லா என்பது தெளிவாகிவிட்டது.
சமீபத்தில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80 உயர்த்தப்பட்டது. இந்த விலையை குறைப்பதற்காக, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு மானியம் அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால், பிரதமர் மன்மோகன்சிங் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளார். 'சார்க் மாநாட்டில் பங்கேற்று விட்டு மாலத்தீவில் இருந்து திரும்பும்போது, விமானத்தில் அவர் அளித்த பேட்டியின்போது, "பண வீக்கம் உயர்ந்ததற்கு, பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்ந்ததும் ஒரு காரணம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது, அதை ஈடுகட்ட, உள்நாட்டில் பெட்ரோலின் விலையை உயர்த்தலாம் அல்லது மற்ற பெட்ரோலிய பொருட்களுக்கு மானியம் அளிக்குமாறு எண்ணெய் நிறுவனங்களை கேட்டுக் கொள்ளலாம் அல்லது பட்ஜெட்டில் இருந்து அரசு கூடுதலாக மானியம் ஒதுக்கலாம்.
ஏற்கனவே பட்ஜெட்டில் மானிய ஒதுக்கீடு ரூ.1.5 லட்சம் கோடியாக உள்ளது. இது தாங்க முடியாத சுமை. இந்த நிலையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு புதிதாக மானியம் அளித்தால், அது பட்ஜெட் சுமையை மேலும் அதிகரித்து விடும். இறுதியாக, அது பண வீக்கத்தை மேலும் அதிகரித்து விடும்.
பண வீக்க உயர்வு, கவலைக்குரிய அம்சம்தான். அதை நான் மறுக்கவில்லை. குறிப்பாக, உணவுப்பொருள் பணவீக்கம் கவலை அளிக்கிறது. ஆனால், உணவு தானியங்களின் விலை சீராக உள்ளது.
முட்டை, மீன், காய்கறி ஆகியவற்றின் விலைதான் உயர்ந்து வருகிறது. தேவைக்கு ஏற்ப சப்ளை இல்லை. சப்ளையில் நிலவும் முட்டுக்கட்டைகளை நீக்க வேண்டும். அதற்கு சிறிது காலம் ஆகும்," என்றார்.
சர்வதேச சந்தை விலைகளுக்கு ஏற்பவே பெட்ரோல் விலை உயர்வு என்கிறார் பிரதமர். ஆனால் கடந்த இரு தினங்களில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 8 டாலர் வரை குறைந்துள்ளது. ஆனால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அதுபற்றி வாய் திறக்க மறுக்கின்றன.












Click it and Unblock the Notifications