பொதுப் பணத்தை அரசு வீணடித்தால் தட்டிக் கேட்பது சிஏஜியின் கடமை- முரளி மனோகர் ஜோஷி

சிஏஜி எனப்படும் தலைமைக் கணக்கு அலுவலகத்தின் 150வது ஆண்டு விழாவையொட்டிநடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, சிஏஜி வினோத் ராய், ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது ஜோஷி பேசுகையில், சிஏஜி குழுவினரின் நடவடிக்கைகள், செயல்பாடுகள் பாராட்டுக்குரியவ. பொதுச் சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, பொதுமக்களின் வரிப்பணம் அனாவசியமாக செலவழிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணித்து அதுகுறித்து நாடாளுமன்றத்திற்கு அறிக்கை அளிக்கும் கடமை, பொறுப்பு சிஏஜிக்கு உண்டு.
சிலருடைய சுயநலத்திற்காக மக்களின் வரிப்பணம் சூறையாடப்படாமல் தடுக்க வேண்டிய கடமையும் அதற்கு உண்டு. ஆனால் சமீப காலமாக சில எம்.பிக்களும், சில மீடியாக்களும் சிஏஜி மீது அவதூறை ஏற்படுத்த முயல்கின்றன. இது துரதிர்ஷ்டவசமானது. அதன் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைக்க முயல்கின்றன. இது தவறானது.
எம்.பிக்களுக்கு எப்போதுமே உயரிய மரியாதையும், கெளவரமும் தரப்படுகிறது. அதேபோல நாட்டின் உயரிய அமைப்புகளில் ஒன்றான சிஏஜியின் செயல்பாட்டையும் நாம் மதித்தாக வேண்டும். அதன் கண்ணியத்தைசீர்குலைக்க முயலக் கூடாது.
அரசு தவறு செய்தால் அதை தடுக்க வேண்டிய கடமையிலிருந்து சிஏஜி ஒருபோதும் தவறக் கூடாது. அரசைக் கண்காணித்து வர வேண்டியது அதன் தார்மீக கடமையாகும் என்றார் ஜோஷி.












Click it and Unblock the Notifications