பஸ் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது- கண்டக்டர்ககளிடம் சண்டை பிடித்த பயணிகள்
சென்னை: பேருந்து கட்டண உயர்வு இன்று காலைமுதலே அமலுக்கு வந்துள்ளது. திடீரென கூடுதல் பஸ் கட்டணம் கேட்டதால் பல இடங்களில் கண்டக்டர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதைக் காண முடிந்தது.
போக்குவரத்து நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறிய முதலமைச்சர் நேற்று அதிரடியாக பேருந்து கட்டணத்தை உயர்த்தி அறிவித்தார்.
வியாழக்கிழமை மாலை அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வு இன்று காலை முதலே அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் குறைந்த அளவு கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாகவும், அதிக அளவு கட்டணம் 12 ரூபாயில் இருந்து 14 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் காலை நேரத்தில் பணிக்கு செல்வதற்காக பேருந்து நிலையம் வந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பல வித கட்டணங்கள்
ஏற்கனவே வெள்ளை போர்டு, மஞ்சள் போர்டு, எம் சர்வீஸ் என பல வழிகளில் கட்டணக் கொள்ளை நடைபெறுவதாக மக்கள் குமுறி வரும் நிலையில் இந்த கட்டண உயர்வு அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்தனர்.
2001 ஆம் ஆண்டிற்குக் பிறகு தற்பொழுதுதான் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக கூறப்படுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. கடந்த 5 ஆண்டு காலத்தில் பல ரக பேருந்துகளை அறிமுகப்படுத்தி பல விதங்களில் கட்டணங்களை சத்தமில்லாமல் திமுக அரசு உயர்த்தியதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.
ஏழை மக்களுக்கு கனவாகும்
சொகுசு பேருந்து கட்டணம் கிலோமீட்டருக்கு 38 பைசாவிலிருந்து 60 பைசாவாகவும், அல்ட்ரா டீலக்ஸ் பேருந்து கட்டணம் 52 பைசாவிலிருந்து 70 பைசாவாகவும், உயர்தப்பட்டுள்ளதற்கு பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தாழ்தளப்பேருந்து, அல்ட்ரா டீலக்ஸ், ஏசி பஸ்களில் கட்டணம் இனி ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதுபோன்ற பேருந்துகளில் பயணம் செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நகரில் சாதாரண பேருந்துகளை விட தற்போது சொகுசுப்பேருந்துகளே அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இந்த கட்டண உயர்வினால் வாங்கும் கூலியை பேருந்து கட்டணத்திற்கு கொடுக்கவே சரியாகிவிடும் என்கின்றனர் கூலித் தெழிலாளர்கள்.
சென்னை நீங்கலாக நகர பேருந்து கட்டணம் குறைந்த அளவு கட்டணம் 2 ரூபாயில் இருந்து 3 ரூபாயாகவும், அதிக அளவு கட்டணம் 7 ரூபாயிலிருந்து 12 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மதுரை நகரில் சாதாரண பேருந்து, எல்.எஸ்.எஸ், சிட்டி எக்ஸ்பிரஸ், தாழ்தளப்பேருந்து என நான்கு வகை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு பேருந்திலும் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
சாதாரன நாட்களிலேயே கிராமப்புறங்களில் இருந்து மதுரைக்கு வந்து செல்பவர்கள் கண்டக்டர்களுடன் சண்டை போட்டுக்கொண்டு செல்வர். திடீரென்று உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வினால் கிராம மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஓவரா ஏத்திட்டீங்களே!
இன்று காலை பஸ் ஏற வந்த பலரும் கட்டண உயர்வு இன்றே அமலுக்கு வந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். பல இடங்களில் கண்டக்டர்களிடம், பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இப்படி ஒரேயடியாக கட்டணத்தை உயர்த்தினால் எப்படி என்று அவர்கள் கண்டக்டர்களிடம் சண்டை பிடித்தனர். அதற்கு அவர்களோ, நாங்கள் என்ன செய்ய முடியும்,அரசுசொல்வதைத்தானே நாங்கள் செய்ய முடியும் என்று பயணிகளிடம் கூறினர். இதனால் பல இடங்களில் இன்று காலை பஸ் பயணம் பயணிகளுக்கும் சரி, கண்டக்டர்களுக்கும் சரி சற்றே கசப்பான அனுபவமாக மாறியதைக் காண முடிந்தது.












Click it and Unblock the Notifications