பால் விலை, பஸ் கட்டணம்: மாநிலமே எரியும் நேரத்தில் ஜெ.வுக்கு 'பிடில்' வாசிக்கும் தொழில் வர்த்தக சபை!

தென் இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் ஜவஹர் வடிவேலு, செயலாளர் எஸ்.ராகவன் ஆகியோர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் கடன் சுமையைக் கருத்தில் கொண்டு பஸ் கட்டணம் மற்றும் பால் விலையை உயர்த்தியும், மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு அனுமதி அளித்தும் முதல்வர் ஜெயலலிதா எடுத்திருக்கும் உறுதியான நடவடிக்கையை தென்இந்திய தொழில் வர்த்தக சபை வரவேற்கிறது. இந்த உயர்வு அவசியம் என்றும், தவிர்க்க முடியாது எனவும் முதல்வர் ஜெயலலிதா நியாயப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.
பால் விலை உயர்த்தப்பட்ட பிறகும், மற்ற தென்மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இந்த விலை குறைவானதுதான். டீசல் விலை மற்றும் உதிரிப் பாகங்கள் விலை உயர்வாலும் நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துக் கழகத்தைக் கருத்தில் கொண்டு 10 ஆண்டுகளுக்கு பிறகு பஸ் கட்டணத்தை முதல்வர் தைரியமாக உயர்த்தி இருக்கிறார்.
இதன்மூலம், தொடர்ந்து புதிய பஸ்களை வாங்கவும், பணியாளர்களை வேலைக்கு சேர்க்கவும், புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் முடியும். மின்கட்டண உயர்வு, நவீன தொழில்நுட்பத்தில் முதலீட்டை ஈர்க்கவும், மின் விநியோகத்தின்போது ஏற்படும் இழப்பை குறைக்கவும் பயன்படும் என்று 'சிக்கி' நம்புகிறது.
- இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications