டெல்லி சமுதாயக் கூடத்தில் பயங்கர தீவிபத்து-15 திருநங்கைகள் பலி
டெல்லி: டெல்லியில் நடந்த திருநங்கையர்கள் மாநாட்டின்போது ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். 31 பேர் படுகாயமடைந்தனர்.
டெல்லி நந்த் நகரி பகுதியில் உள்ள சமுதாயக் கூடம் ஒன்றில் திருநங்கையர் மாநாடு ஒன்று நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுக்காக சமுதாயக் கூடத்திலேயே உணவு சமைக்கப்பட்டது. நேற்று மாலையில் சமுதாயக் கூடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதி மளமளவென பரவியதில் உள்ளே இருந்தோர் சிக்கிக் கொண்டனர்.
இதில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். 31 பேர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர்.உடனடியாக அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
சமுதாயக் கூடத்தை ஒட்டி தற்காலிக டென்ட் அடித்திருந்தனர். அங்கு பல திருநங்கையர் தங்கியிருந்தனர். அங்கு ஏற்பட்ட மின்கசிவில்தான் தீவிபத்து ஏற்பட்டு விட்டது. மேலும் டென்ட்டுக்கு அருகில் சமையல் செய்ய வைக்கப்பட்டிருந்த காஸ் சிலிண்டர்களும் தீயில் சிக்கி வெடித்துச் சிதறியதால் தீவிபத்து பெரிதாகி விட்டது.
12க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வந்து கடுமையாக போராடி தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தன.