பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜெண்ட் மன்மோகன் அரசு- வைகோ குற்றச்சாட்டு
தஞ்சாவூர்: பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜெண்டாக மன்மோகன் அரசு செயல்படுவதால் அவர்களுக்கு விவசாயிகளைப் பற்றி கவலை இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
தஞ்சை கலெக்டர் அலுவலகம் பனகல் கட்டிடம் முன்பு உரத் தட்டுப்பாடு, உர விலையேற்றம், விவசாயிகளின் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது ஆகியவற்றை கண்டித்து மதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது,
உரங்களின் விலையை தாறுமாறாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கடமையை நிறைவேற்றத் தவறிய அதிமுக அரசை கண்டித்தும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகிறோம்.
உரங்களின் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மத்திய அரசு உதறி விட்டது. அதனால் உரக் கம்பெனிகள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப விலைகளை ஏற்றி வருகின்றன. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதுள்ள சூழலில் விவசாயம் செய்வதால் எந்த லாபமும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயம் செய்யவே பலர் முன்வருவதில்லை.
நதிநீர் பிரச்னை, உரத் தட்டுப்பாடு, விளைவித்த பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காதது, இடுபொருட்கள் தட்டுப்பாடு, இன்சூரன்ஸ் தொகை கிடைக்காதது போன்ற பல்வேறு பிரச்சனைகளில் விவசாயிகள் சிக்கித் தவிக்கின்றனர். இதே நிலை நீடிக்குமானால் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்.
பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜெண்டாக மன்மோகன் அரசு செயல்படுகிறது. விவசாயிகளைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை.
இங்குள்ள அரசும் இலவசங்களைக் கொடுத்து போதைக்கு அடிமைப்படுத்தி மக்களை ஏமாற்றும் அரசாக உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications