கருப்புப் பணமோ, சட்டவிரோத சொத்தோ இல்லை என என்டிஏ எம்.பி.க்கள் உறுதியளிப்பார்கள்: அத்வானி
டெல்லி: வெளிநாட்டு வங்கிகளில் தாங்கள் கருப்புப் பணத்தை பதுக்கி வைக்கவில்லை, சட்டவிரோதமாக சொத்து சேர்க்கவில்லை என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் உறுதியளிப்பார்கள் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அத்வானி மேற்கொண்ட யாத்திரை, தில்லி ராம் லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.
கருப்புப் பண ஒழிப்பை வலியுறுத்தி நாடு தழுவிய ரத யாத்திரையை பீகாரில் தொடங்கினார் அத்வானி. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் வழியாக தொடர்ந்த இந்த யாத்திரை நேற்றுடன் டெல்லியில் முடிவுக்கு வந்தது.
இதையொட்டி ராம்லீலா மைதானத்தில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் அத்வானி பேசினார்.
அப்போது அவர் கூறிதாவது,
வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணமோ, சட்டவிரோதமான சொத்துகளோ தங்களிடம் இல்லை என்று தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் வரும் 22 ம் தேதி உறுமொழிக் கடிதம் அளிப்பார்கள். அந்த கடித்தத்தை மக்களவைத் தலைவர் மீரா குமார், குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஹமீது அன்சாரி ஆகியோரிடம் அளிப்பார்கள்.
ஊழலையும், கருப்புப் பணத்தையும் தடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தவறி விட்டது. வலுவான லோக்கபால் சட்டத்தின் மூலம் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும் என்றார்.
பாஜக தலைவர்நிதின் கத்காரி, மூத்த தலைவர்களான சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி உள்ளிட்ட தலைவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
முன்னதாக டெல்லி செல்லும் வழியில் காசியாபாத்தில் அத்வானி பேசியதாவது,
பல்வேறு காரணங்களுக்காக கடந்த 60 ஆண்டுகளில் 6 முறை யாத்திரை மேற்கொண்டுள்ளேன். ஆனால் மூத்த பாஜக தலைவர் வாஜ்பாய் இல்லாமல் நான் மேற்கொண்ட முதல் யாத்திரை இது தான். இந்த யாத்திரைக்கு பல்வேறு மாநிலங்களில் மக்கள் அமோக வரவேற்பு அளித்தார்கள்.
தொலைத் தொடர்புத் துறையில் ஊழலில் ஈடுபட்டதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராமுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். ஊழலை ஒழிப்பதில் நீதித்துறை முனைப்பாக உள்ளது என்றார்.
பாஜக தலைவர் நிதின் கட்காரி கூறுகையில், நாடாளுமன்றத்தில் ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பாஜகவினரை கைது செய்ததற்காக பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.