நதிகள் இணைப்பை வலியுறுத்தி 3ம் தேதி சென்னை-புதுவைக்கு பாதயாத்திரை: குமரி அனந்தன்
சென்னை: நதிகள் இணைப்பை வலியுறுத்தி காந்தி பேரவை சார்பில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வரும் 3ம் தேதி பாதயாத்திரை மேற்கொள்ளவிருப்பதாக அந்த பேரவையின் தலைவர் குமரி அனந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூட்டம் சென்னையில் உள்ள பாரதியார் இல்லத்தில் நடந்தது. மயிலை பெரியசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் பேசியதாவது,
அமெரிக்காவில் பெய்யும் அளவுக்கு இந்தியாவிலும் மழை பெய்கிறது. அப்படி இருக்கையில் அவர்கள் நம் நம்மைவிட 6 மடங்கு அதிக தண்ணீரை சேமிக்கின்றனர். நம் நாட்டிலோ ஒரு பக்கம் வெள்ள சேதம் மறுபக்கம் வரட்சி.
எனவே, நதிகள் இணைப்பை வலியுறுத்தி வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி பாரதியார் இல்லத்தில் இருந்து புதுச்சேரிக்கு பாதயாத்திரை நடக்கிறது. இந்த யாத்திரையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் துவங்கி வைக்கிறார்.
நம் நாட்டில் கிடைக்கும் தண்ணீரில் வெறும் 31 சதவீதத்தை தான் பயன்படுத்துகிறோம். மீதமுள்ள 69 சதவீதம் கடலில் கலக்கிறது. தற்போது இந்தியாவில் 49.4 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் பயிர் செய்யப்படுகிறது. இதுவே நதிகளை இணைத்தால் கூடுதலாக 35 மில்லியன் ஹெக்டேரில் பயிர் செய்ய முடியும். தற்போது நீர் மூலம் 22,438 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. அதுவே நதிகள் இணைக்கப்பட்டால் 1,48,700 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நதிகள் இணைக்கப்பட்டால் நீர்வழிச்சாலை கிடைக்கும். ஒரு குதிரை சக்தியை கொண்டு தரையில் 150 கிலோ பாரத்தையும், ரயிலில் 500 கிலோ பாரத்தையும், நீர்வழியில் கப்பல் மூலம் 4,000 கிலோ பாரத்தையும் கொண்டு செல்லலாம். இவ்வாறு செய்வதன் மூலம் அந்நியச் செலவாணி மிச்சமாகும். அதனால் நதிகளை இணைப்பதே நாட்டின் நலனைப் பெருக்க உதவும் என்றார்.












Click it and Unblock the Notifications