திருப்பதி மலையில் மீண்டும் சிறுத்தைப்புலி நடமாட்டம்:பக்தர்கள் ஓட்டம்
திருமலை: திருப்பதி மலைப்பகுதியில் மீண்டும் சிறுத்தைப்புலி நடமாட்டம் ஏற்பட்டுள்ளது. சிறுத்தைப்புலியைப் பார்த்த பக்தர்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பதி மலையில் உள்ள ஏழுமலையான கோவிலுக்கு நடந்து செல்லும் பக்தர்கள் சிறுத்தைப் புலிகள் நடமாட்டத்தால் பீதியடைந்தனர். அந்த சிறுத்தைப் புலிகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டதை அடுத்து பக்தர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
இந்நிலையில் மீண்டும் சிறுத்தைப்புலி நடமாட்டம் ஏற்பட்டுள்ளது. திருமலைக்கு செல்லும் பக்தர்கள் சிலர் ஏழுமலையானின் பாதம் பதிந்திருப்பதாக நம்பப்படும் ஸ்ரீவாரி பாதம் என்ற இடத்திற்கு செல்வது வழக்கம். திருமலைக்கு மேல் நாராயணகிரி எனப்படும் மலைப்பகுதியில் உள்ள இந்த இடத்திற்கு பேருந்து வசதி இல்லை. அதனால் பக்தர்கள் தங்கள் வாகனங்களில் தான் செல்ல வேண்டும்.
நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் பக்தர்கள் சிலர் ஸ்ரீவாரி பாதத்திற்கு சென்றுள்ளனர். அங்கு ஏழுமலையானை தரிசித்துவிட்டு திரும்புகையில் அப்பகுதியில் சிறுத்தைப் புலி ஒன்று நடமாடியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் காரை நிறுத்திவிட்டு முகப்பு விளக்கை அணைத்துவிட்டு சிறுத்தைப் புலி அந்த இடத்தை விட்டுப்போகும் வரை காத்திருந்தனர். இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் பயத்தில் ஓட்டம் எடுத்தனர்.
சிறிது நேரம் கழித்து சிறுத்தைப் புலி அந்த இடத்தைவிட்டு சென்றதும் காரில் இருந்த பக்தர்கள் தப்பித்தோம், பிழைத்தோம் என்று திருமலைக்கு சென்றனர். ஆனால் இரு சக்கர வாகனங்களில் இருந்தவர்கள் பயத்தில் மேலேயே இருந்து கொண்டனர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் பட்டாசுகளை எடுத்துக் கொண்டு ஸ்ரீவாரிபாதம் சென்றனர். அங்கு பட்டாசுகள் வெடித்து சிறுத்தைப்புலியை காட்டுக்குள் விரட்டினர். அதன் பிறகே இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் கீழை இறங்கினர்.
இது குறித்து திருமலை வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது,
ஸ்ரீவாரி பாதம் பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளதாக கடந்த வாரமும் பக்தர்கள் தெரிவித்தனர். தற்போது மீண்டும் அதே புகார் வந்துள்ளது. தேவஸ்தான அதிகாரிகளுடன் பேசி ஸ்ரீவாரி பாதம் பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தைப் புலியைப் பிடிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றனர்.












Click it and Unblock the Notifications