4வது திருமணம் செய்ய கல்லூரி மாணவியை கடத்திய 'காதல் மன்னனுக்கு' வலைவீச்சு
வாழப்பாடி: கல்லூரி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை 4வது திருமணம் செய்ய கடத்தி சென்ற கட்டிட தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
முதலில் சுமதி
சேலம் மாவட்டம், மேச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன்(35). கட்டிட தொழிலாளர். அவர் அதே பகுதியில் வசித்து வந்த உறவு முறை பெண்ணான சுமதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சுமதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில், அவரை வெறுத்து ஒதுக்கினர்.
2வது மனைவி கற்பகம்
பின்னர் அவரை வீட்டை விட்டு துரத்திவிட்டு, கற்பகம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
கற்பகத்துடன் சில ஆண்டுகள் வாழ்ந்த பரசுராமன், பின்னர் அவரிடமும் வெறுப்பு காட்ட ஆரம்பித்தார். கற்பகத்துக்கு 2 மகன்கள், 2 மகள்கள் பிறந்த நிலையில் அவரிடம் இருந்தும் பிரிந்தார்.
3வதாக தென்னங்குடி பாளையம் பிரியா
இந்த நிலையில் ஆத்தூரை அடுத்த தென்னங்குடி பாளையத்தில் பரசுராமன் வேலைக்கு சென்றார். அங்கு பிரியா என்ற பெண்ணை காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டார். பிரியாவுக்கு 1 பெண் குழந்தை பிறந்தவுடன் பரசுராமன் அவரை விட்டு பிரிந்தார்.
மறுபடியும் கற்பகத்துடன் குடித்தனம்
பின்னர் 2வது மனைவி கற்பகத்துடன் மீண்டும் சேர்ந்து வாழ தீர்மானித்த பரசுராமன், வாழப்பாடி இந்திரா நகர் பகுதியில் குடும்பத்துடன் குடியேறினார்.
சங்கீதாவுக்கு காதல் வலை வீச்சு
சில நாட்களில் அதே பகுதியில் வசித்து வந்த சேலம் அரசு கல்லூரியில் பி.பி.ஏ. முதலாமாண்டு பிடித்து வந்த மாணவி சங்கீதா(18) என்பவருக்கு பரசுராமன் காதல் வலை வீசினார்.
சங்கீதாவிடம் ஆசை வார்த்தை கூறி அவரை கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி பரசுராமன் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது மகளை பல இடங்களில் தேடிப் பார்த்த சங்கீதாவின் தாய் காந்தி, கடந்த செப்டம்பர் 9ம் தேதி வாழப்பாடி போலீசாரிடம் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையி்ல் திருமண மன்னன் பரசுராமன் சுமதி, கற்பகம், பிரியா, சங்கீதா போல பல பெண்களை தனது காதல் வலையில் விழ வைத்துள்ளது தெரிய வந்தது.
2 பேருக்கும் வலைவீச்சு
பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த பரசுராமன் மற்றும் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி சங்கீதா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.