ஹய்யா, ஜாமீன் கிடைச்சாச்சு: துள்ளி குதித்த உறவினர்களை கண்டித்த நீதிபதி
டெல்லி: 2ஜி வழக்கில் கைதான கார்பரேட் அதிகாரிகள் 5 பேருக்கு ஜாமீன் கிடைத்த தகவல் அறிந்ததும் அவர்களது உறவினர்கள் நீதிமன்றத்தில் துள்ளி குதித்து கொண்டாடியதால் அவர்களை நீதிபதி கண்டித்தார்.
2ஜி ஊழல் வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சிபிஐ தனி நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. நீதிபதி ஓ.பி. சைனி முன்பு விசாரணை நடந்தது. இந்த வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
ஹெச்.டி.எப்.சி. வங்கியின் உதவி துணைத்தலைவர் உதய் சகஸ்ரபுத்தேயிடம் குறுக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது ராசாவுடன் கூட்டு சேர்ந்து முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் இயக்குனர் வினோத் கோயங்கா, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன அதிகாரிகள் ஹரி நாயர், கௌதம் தோஷி, சுரேந்திர பிபாரா மற்றும் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய தகவல் கிடைத்தது.
உடனே அந்த 5 பேரும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர். நீதிமன்றத்தில் இருந்த தங்களது உறவினர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். சிலருடைய உறவினர்கள் எப்படியும் ஜாமீன் கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் கொண்டுவந்திருந்த இனிப்புகளை வழங்கினர். அந்த 5 பேருக்கும் ராசா, கனிமொழி உள்ளிட்ட மற்றவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
விசாரணை நடந்து கொண்டிருக்கையில் இந்த கொண்டாட்டங்களால் நீதிமன்றத்தி்ல் சிறிது நேரம் பரபரப்பும், குழப்பமும் ஏற்பட்டது. இதையடுத்து நீதிபதி சைனி குற்றம்சாட்டப்பட்டவர்களின் உறவினர்களையும், நிருபர்களையும் இடையூறு செய்யாமல் வெளியேறுமாறு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications