கடலூர் காவல் நிலையங்களுக்கு பெண் வரவேற்பாளர்கள் நியமனம்- எஸ்.பி. பகலவன் தகவல்
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர்களை மாவட்ட எஸ்.பி. பகலவன் நியமித்துள்ளார்.
தமிழகத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் புகார் கொடுக்க வரும் பொதுமக்களை வரவேற்று, அவர்களுக்கு உதவ வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா சென்னையில் நடந்த கலெக்டர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மாநாட்டில் அறிவுறுத்தினார்.
இதனையடுத்து சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் 52 காவல் நிலையங்களுக்கும் வரவேற்பாளர்களை எஸ்.பி. பகலவன் நியமித்து உத்தரவிட்டார்.
நகரப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு தலா 2 வரவேற்பாளர்கள், கிராமப் பகுதியில் தலா ஒரு பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீதம் 56 பெண் போலீசார், 25 ஆண் போலீசார் என்று மொத்தம் 82 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் எப்படி பழக வேண்டும், அவர்களுக்கு எப்படி உதவி செய்ய வேண்டும் என்பது குறித்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக எஸ்.பி. பகவலன் தெரிவித்துள்ளார்.