4 புதிய பகுதி நேர போக்குவரத்து அலுவலங்கள் துவக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
போக்குவரத்துத்துறை, மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் விதிகளை நடைமுறைப்படுத்தி 63 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் பொதுமக்களுக்கு சிறந்த சேவை வழங்கி வருகின்றன. இதுமட்டுமின்றி 50 பகுதி அலுவலகங்கள் மூலமாக பொது மக்களுக்கு சிறந்த சேவை வழங்கி வருகிறது.
வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் வாகனங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, பெரும் நகரங்களில் மட்டுமல்லாமல், சிறு நகரங்களிலும் கிராமப் பகுதிகளிலும் அதிகரித்து வருவதால், ஓட்டுநர் உரிமங்கள் பெறுதல், புதிய வாகனங்களைப் பதிவு செய்தல், போக்குவரத்து வாகன வரி மற்றும் கட்டணங்களை கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்காக, பொது மக்கள் போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்வது அதிகரித்து வருகின்றது.
இதனைக் கருத்தில் கொண்டு மக்கள் தேவை உள்ள இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் அல்லது பகுதி போக்குவரத்து அலுவலகங்களை துவங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில், திண்டிவனம் மற்றும் அதனை ஒட்டியுள்ள செஞ்சி, வானூர் பகுதிகளில் அதிகரித்து வரும் வாகனம் மற்றும் வாகன ஓட்டுநர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும், அனுமதிச் சீட்டு, வரி பாக்கியில்லா சான்று போன்ற ஆவணங்களை பெறுவதற்காக இப்பகுதி மக்கள் தொலைவிலுள்ள விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு செல்ல வேண்டியுள்ளதை கருத்தில் கொண்டும், இந்த பகுதி மக்களின் நேரம் மற்றும் பண விரயங்களை தவிர்க்கும் வகையிலும், தற்போது திண்டிவனத்தில் உள்ள பகுதி அலுவலகத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து தற்போது 6 பணியிடங்களுடன், கூடுதலாக 1 வட்டார போக்குவரத்து அலுவலர், 1 நேர்முக உதவியாளர், 1 மோட்டார் வாகன ஆய்வாளர் கிரேடு 2, 2 கண்காணிப்பாளர், 1 கணக்காயர், 2 உதவியாளர், 2 இளநிலை உதவியாளர், 1 தட்டச்சர், 1 பதிவறை எழுத்தர், 1 ஓட்டுநர், 1 அலுவலக உதவியாளர் என்று 14 பணியிடங்கள் உருவாக்கப்படும்.
இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.53,11, 560 தொடர் செலவினமாகவும், ரூ.9,57,500 தொடரா செலவினமாகவும் கூடுதல் செலவு ஏற்படும்.
இதேபோல ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பெருகிவரும் வாகனப் பெருக்கம் மற்றும் வாகன பயன்படுத்துவோரை கருத்தில் கொண்டும், இந்த பகுதி மக்கள் போக்குவரத்து அலுவலக சேவைகளுக்காக தொலைவில் உள்ள காஞ்சிபுரம் வட்டார அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய நிலையை கருத்தில் கொண்டும், காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லையின் கீழ்வரும் ஸ்ரீ பெரும்புதூர் பகுதியை பிரித்து, அங்கே புதிய போக்குவரத்து பகுதி அலுவலகம் ஒன்று ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் வருவாய் வட்டாரத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளும் இந்த புதிய பகுதி அலுவலகத்தின் அதிகார வரம்பிற்குள் கொண்டு வரப்படும். இந்த புதிய அலுவலகம் காஞ்சிபுரம் போக்குவரத்து வட்டார அலுவலகத்தின் கீழ் செயல்படும்.
இதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி மற்றும் சங்கராபுரம் பகுதிகளில் உள்ள மக்கள், போக்குவரத்துத்துறை மூலம் ஓட்டுநர் உரிமம், வாகனக் கட்டணம், வரி செலுத்துதல், புதிய வாகனங்களை பதிவு செய்தல் மற்றும் இதரப் பணிகளுக்காக தொலைவில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதி அலுவலத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கள்ளக்குறிச்சியில் புதியதாக ஒரு பகுதி அலுவலகம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த புதிய பகுதி அலுவலகத்தின் அதிகார வரம்பிற்குள் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் ஆகிய வட்டப் பகுதிகள் வரும். இந்த பகுதி அலுவலகம் விழுப்புரம் போக்குவரத்து வட்டார அலுவலகத்தின் கீழ் செயல்படும்.
இதேபோல திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதி மக்கள் போக்குவரத்துத்துறை சம்பந்தமான கட்டணங்கள் மற்றும் வரிகள் செலுத்துதல் மற்றும் ஏனைய பணிக்களுக்காக தொலை தூரத்திலுள்ள திண்டுக்கல் போக்குவரத்து வட்டார அலுவலகத்துக்கு செல்ல வேண்டி உள்ளது.
இதனால் இந்த பகுதி மக்களுக்கு காலவிரயமும், பொருள் விரயமும் ஏற்படுகிறது இதனை கருத்தில் கொண்டு வேடசந்தூர் வட்டப் பகுதிகளை உள்ளடக்கி வேடசந்தூரில் ஒரு பகுதி அலுவலகம் அமைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த பகுதி அலுவலகம் திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் செயல்படும். இதேபோல தர்மபுரி போக்குவரத்து வட்டார அலுவலகத்தின் கீழ் வரும் பாலக்கோடு பகுதியில் வசிக்கும் மக்கள் வாகனங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளுக்கும் தொலைவில் உள்ள தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. அதனை கருத்தில் கொண்டு தர்மபுரி போக்குவரத்து வட்டார அதிகார வரம்புக்குள் வரும் பாலக்கோடு பகுதியை பிரித்து, பாலக்கோட்டை தலைமையிடமாக கொண்டு ஒரு பகுதி அலுவலகம் அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
பாலக்கோடு வருவாய் வட்ட வரம்புக்குள் வரும் பகுதிகள் இதன் கீழ் கொண்டு வரப்படும். இந்த பகுதி அலுவலகம் தர்மபுரி போக்குவரத்து வட்டார அலுவலகத்தின் கீழ் செயல்படும். இப் பகுதி அலுவலகங்கள் ஒவ்வொன்றிற்கும் 1 மோட்டார் வாகன ஆய்வாளர் கிரேடு- ஐ, 1 கண்காணிப்பாளர், 1 உதவியாளர், 1 இளநிலை உதவியாளர் அல்லது தட்டச்சாளர், 1 அலுவலக உதவியாளர், 1 காவலர், 1 ப்ரோகிராமர் என்று மொத்தம் 7 பணியிடங்களை ஏற்படுத்தவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள 4 பகுதி அலுவலகங்களுக்கும் சேர்த்து, மொத்தம் 28 புதிய பணியிடங்களை ஏற்படுத்துவதினால் ஒவ்வொரு புதிய பகுதி அலுவலகத்திற்கும், ஆண்டுக்கு தொடர் செலவினமாக ரூ.21,40,284, தொடரா செலவினமாக ரூ.3 லட்சம் என்று மொத்தம் 4 புதிய பகுதி அலுவலகங்களுக்காக ரூ.97,61,000 செலவினம் ஏற்படும், என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.