நம்ம கூடவே ஒரு MGR-ஆக விஜய் இருந்திருக்காரு! கீர்த்தி சுரேஷ் கல்யாணத்தில் சொன்ன விஷயம்.. முதல்வர் பற்றி லிங்குசாமி ஓபன்
சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகும், அவரைப் பற்றிய விவாதங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அரசியல் முடிவுகள் ஒரு பக்கம் பேசப்பட்டாலும், சினிமா பிரபலங்கள் அவரைப் பற்றி பகிரும் அனுபவங்களும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி வருகின்றன.
அந்த வரிசையில், இயக்குநர் லிங்குசாமி சமீபத்தில் பேசிய சில வார்த்தைகள் இப்போது விஜய் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக, "நம்ம கூடவே ஒரு எம்.ஜி.ஆர் இருந்திருக்காரு... நமக்குத்தான் தெரியாமல் போயிருச்சு" என்ற அவரது கருத்துதான் இணையத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் லிங்குசாமி பேட்டி
செய்தியாளர்களிடம் பேசிய லிங்குசாமி, தேர்தல் முடிவுகள் வெளியான நாளை பற்றி பேசி இருக்கிறார். "காலை எட்டு மணிக்கே என் ஆபீஸில் நான், இயக்குநர் ஷங்கர், பேரரசு, சரண் உள்ளிட்ட பலரும் ஒன்றாக அமர்ந்து தேர்தல் முடிவைப் பார்த்தோம். கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது மாதிரி ஒவ்வொரு தொகுதியின் முடிவையும் பார்த்துக்கொண்டே இருந்தோம்.
அப்போது 'ரேணிகுண்டா' இயக்குநர் பன்னீர்செல்வம் மட்டும், 'விஜய் கண்டிப்பாக ஜெயிப்பார்; இவ்வளவு தொகுதிகள் வரைக்கும் வெல்வார்' என்று உறுதியாகச் சொன்னார். ஆனால் அங்கே இருந்த பலருக்கும் அது நம்பிக்கையே இல்லை. 'இரண்டு வருடம் முன்தான் கட்சி ஆரம்பிச்சாரு... இவ்வளவு சீக்கிரம் எப்படி சாத்தியம்?' என்றுதான் பலரும் பேசினார்கள். ஆனா, எல்லாரோட கணக்கையும் விஜய் ஒரே நாள்ல மாற்றிட்டாரு," என்று அவர் கூறினார்.

எல்லாத்தையும் தாண்டி வெற்றி
விஜய்யின் வெற்றி சாதாரண அரசியல் வெற்றி இல்லை என்றும் லிங்குசாமி குறிப்பிட்டார். "சாதி, மதம், பணம் என்று தேர்தலில் பேசப்படும் எல்லா விஷயங்களையும் தாண்டி மக்கள் அவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இரண்டு வருடத்தில் ஒரு கட்சி இப்படி ஆட்சிக்கு வருவது ஒரு அரசியல் மேஜிக் மாதிரி இருக்கிறது," என்று அவர் கூறியுள்ளார்.
நம்ம கூடவே ஒரு எம்.ஜி.ஆர்
இந்த பேட்டியில் அதிகம் பேசப்பட்ட இன்னொரு விஷயம், நடிகர் பிரபுதேவா கூறியதாக லிங்குசாமி சொன்ன விஷயம் தான். அதாவது பிரபுதேவா ஒருநாள் என்னிடம், 'சார்... நம்ம கூடவே ஒரு எம்.ஜி.ஆர் இருந்திருக்காரு. நமக்குத்தான் அது புரியலை' என்று சொன்னார்.
அந்த வார்த்தையை கேட்டபோது நானும் யோசித்தேன். இன்று நடக்கும் விஷயங்களை பார்த்தால் அந்த வார்த்தையில் ஒரு அர்த்தம் இருக்கிறது என்று தோன்றுகிறது என்றார். அவர் பேசியதில் இந்த கிளிப்பை மட்டுமே வெட்டி எடுத்து தற்போது விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
கோவாவில் நடந்த ஒரு மணி நேர சந்திப்பு
தேர்தலுக்கு முன்பே விஜய்யுடன் நடந்த தனிப்பட்ட சந்திப்பையும் லிங்குசாமி பகிர்ந்துள்ளார். கீர்த்தி சுரேஷின் திருமண விழாவில் விஜய்யை சந்தித்தபோது, "மாலையில் சந்திப்போம் அண்ணா" என்று விஜய் கூறியதாகவும், அதன் பிறகு இருவரும் சுமார் ஒரு மணி நேரம் தனியாக பேசியதாகவும் தெரிவித்தார். அப்போது, முதலமைச்சராக வந்த பிறகு எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து தனது கருத்துகளையும் விஜய்யிடம் சொன்னதாக லிங்குசாமி கூறியுள்ளார்.
நல்ல புரிதல்
"நானும் விஜயும் சேர்ந்து ஒரு படம் கூட பண்ணல. ஆனா எப்போதும் ஒரு நல்ல தொடர்பு இருக்கு. நான் வீட்டுக்கு போனா, என்னோட பட பாடல்களைத்தான் போடுவார்.
நான், ஷங்கர், மணிரத்னம், வெற்றிமாறன் போன்ற இயக்குநர்கள் ஒன்றாக அமர்ந்து பேசுவோம் என்று அவருக்கு தெரியும். 'நீங்க எல்லாம் என்ன பேசுவீங்க?' என்று ஆர்வமாக கேட்பார்," என்று லிங்குசாமி சிரித்தபடி கூறினார்.
200 கோடி சம்பளம்
மேலும் லிங்குசாமி பேசும்போது, விஜய் பார்க்காத பணமா? ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியவர். அந்த வாழ்க்கையை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார். இது சாதாரண முடிவு இல்லை," என்று அவர் கூறியுள்ளார்.













Click it and Unblock the Notifications