அன்னிய முதலீட்டால் பொருளாதார சீரழிவு என்ற 'பிரமாண்டமான சுனாமி' ஏற்படும்- கருணாநிதி எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: சிறு வணிகத்தில் அன்னிய முதலீடுகள் மூலம் பொருளாதார சீரழிவு என்ற ஒரு பிரமாண்டமான சுனாமியைச் சந்தித்துத் தீர வேண்டிய கட்டாயம் ஏற்படக்கூடும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லட்சக்கணக்கான சில்லரை வணிகர்களையும், வாங்கிப் பயன்படுத்தும் ஏழையெளிய நடுத்தர மக்களையும் பாதிக்கக்கூடிய அளவுக்கு சில்லரை வணிகத்தில் அன்னிய நாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீட்டை அனுமதிப்பது ஆபத்து என்பதையும், நாட்டின் பொருளாதார சரிவுக்கு, அதுவும் ஒரு மூல காரணமாக ஆகிவிடும் என்பதையும், திமுகவின் சார்பில் திட்டவட்டமாக நாடாளுமன்றத்திலே எடுத்துரைத்துள்ள எச்சரிக்கைக்கு மாறாக, மத்திய அரசு அந்த முடிவை மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என்று வற்புறுத்துவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த இயலாது.

இப்படிப்பட்ட யோசனை இந்தியாவில் பரவ விடப்பட்ட நேரத்திலேயே திமுக அதற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வாதாடியிருக்கிறது. இந்தியாவில் உள்ள பல முக்கியமான மாநிலங்களின் அரசுகள் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடுகள் தாக்கம் பெற்று ஏழை-எளிய மக்களும், சில்லரை நடுத்தர வியாபாரிகளும் ஆக்க வழியின்றி, ஊக்கம் தளர்ந்து வாழ்வாதாரங்களையே இழந்து விடக்கூடிய வேதனையைத்தான் அனுபவிக்க நேரிடும் என்பது, அன்னிய நாடுகளோடும், நம்மைப் போன்ற நாடுகளோடும் ஒப்பிட்டுப் போர்க்கும்போது, உணரக்கூடிய உண்மை.

சிறு வணிகத்தில் அன்னிய முதலீடுகள் மூலம் பொருளாதார சீரழிவு என்ற ஒரு பிரமாண்டமான சுனாமியைச் சந்தித்துத் தீரவேண்டிய கட்டாயம் ஏற்படக்கூடும் என்ற அய்யப்பாடும், அதிலிருந்து மீளவேண்டும் என்கின்ற எச்சரிக்கையும் அதன் காரணமாக எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகளும் இன்றியமையாதவை என்பதை, இதனை எண்ணிப்பார்க்கும் மனிதநேயம் உடையவர் யாரும் மறுப்பதற்கோ அல்லது மறப்பதற்கோ எந்தவித நியாயமுமில்லை.

அதற்காக நான், இது மாநில அரசுகளின் கருத்துக்களைக் கேட்காத மத்திய அரசின் ஆணவப்போக்கு என்று தமிழக முதல்வர் குறிப்பிட்டிருப்பதைப் போலக் கூற மாட்டேன்.

மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமலும், யாருடனும் கலந்துகொண்டு பேசிடாமலும், பால்விலை உயர்வையும், பஸ் கட்டண உயர்வையும் தன் மனம்போன போக்கில் அறிவித்துள்ள ஜெயலலிதாவின் நடைமுறைக்கு ஈடாக மத்திய அரசின் இந்த அறிவிப்பை ஒப்பிட முடியாவிட்டாலும், மத்திய அமைச்சர் நாராயணசாமி, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடுகள் குறித்த மத்திய அரசின் முடிவை, மாநிலங்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்று வற்புறுத்த மாட்டோம் என்று கூறி இருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.

ஆனால் எவ்வித வற்புறுத்தலும் இல்லாமலேயே, எந்த ஒரு மாநிலமாவது இதைக் கடைப்பிடிக்கத் தொடங்கினால் எங்கேயோ மூண்ட தீயின் சிறுபொறி மற்ற மாநிலங்களிலும் பரவி பற்றிவிடக்கூடும். எனவே சில்லரை வாணிபத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்ற மத்திய அரசின் முடிவை மாநிலங்களிலும் அமல்படுத்துவது என்ற நிலைமையை வற்புறுத்தாமல், வற்புறுத்தாதது மட்டுமல்ல, ஆலோசனையாகக் கூடக்கூறாமல் திமுக உள்ளிட்ட கட்சிகளின் கருத்துக்கும், வணிகப் பெருமக்களின் ஒருமித்த கோரிக்கைக்கும் இசைவளித்து உடனடியாக இந்த முடிவைத் திரும்பப்பெற வேண்டுமென்று மத்திய அரசை, திமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+