Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பட்டதாரிகள் உருவாக திமுகவே காரணம்-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில பேருடைய நுழைவால், சில பேருடைய சூழ்ச்சியால், சில பேருடைய தாக்கத்தால் தமிழினம் இன்றைக்கு தனது இனம், குலம், கலை, நாகரிகம், பண்பாடு ஆகியவற்றையெல்லாம் மறந்து பலருடைய கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத ஒரு இடத்தில் அமர்ந்திருக்கின்ற காட்சியை நாம் காணுகின்றோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

திமுக முன்னாள் எம்எல்ஏ டாக்டர் ஞானசேகரன் சகோதரரும் அச்சுத கவுண்டர் மகனுமான வாசுதேவன்-காஞ்சன மாலா திருமணம், அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடந்தது. திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைத்து கருணாநிதி பேசுகையில்,

ஞானசேகரனை நீண்ட காலமாக அறிவேன். அவருடன் மகிழ்ந்தும், கடிந்தும் பழகியிருக்கிறேன். அவருடைய பண்பு, மன உறுதியை அறிவேன். அதனால்தான் இன்று இந்த திருமணத்தில் பங்கேற்றிருக்கிறேன். நமது இல்லங்களின் எந்த விழாவானாலும் திராவிட பண்பாடு, திராவிட கலாசார மேன்மையுடன் நடைபெற வேண்டும்.

இங்கே வழங்கப்பட்டுள்ள திருமண அழைப்பிதழைப் பார்க்கும்போது, ஓர் இடத்திலே நாயக்கர் என்றும், இன்னொரு இடத்தில் கவுண்டர் என்றும் இப்படி பல்வேறு சொற்களால் உங்களுடைய சமுதாயத்தினுடைய பிரிவுகள் அடையாளம் காட்டப்பட்டிருக்கின்றன. நாயக்கர் என்றாலும், கவுண்டர் என்றாலும், எங்களுடைய தஞ்சை மாவட்டம் போன்ற இடங்களிலே வழக்கத்திலே இருக்கின்ற படையாச்சியார் என்றாலும் எல்லாமே மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பங்கள்தான் என்பதை நானும் அறிவேன், அனைவரும் அறிவீர்கள்.

அந்த வகையில் இன்றைக்கு இந்த விழாவில் மணமகன், மணமகள் இவர்கள் எல்லாம் கற்றவர்களாக, இன்னும் சொன்னால் மேல்படிப்புக்கு உகந்தவர்களாக, உரியவர்களாக ஆகியிருப்பதற்கும், ஞானசேகரனே ஒரு டாக்டராக விளங்கி வருவதற்கும்- ஒரு ஞானசேகரன் அல்ல, பல ஞானசேகரன்கள் தமிழ்நாட்டில் இன்றைக்கு இந்தச் சமுதாயத்திலிருந்து டாக்டர்களாக, வேறு பல துறைகளிலே விற்பன்னர்களாக விளங்குவதற்கு எது காரணம் என்று பார்த்தால், நாமெல்லாம் ஒரே சாதி, தமிழ்ச் சாதி, திராவிட சாதி, நமக்குள்ளே பேதம் இல்லை, நமக்குள்ளே வேறுபாடு இல்லை, உயர்வு தாழ்வு இவைகளைப் பற்றி நாம் பேசக்கூடாது, அதை கருதவும் கூடாது என்று அந்த அளவில் நாம் வாழ வேண்டும், நம்முடைய சமுதாயம் விளங்க வேண்டும் என்ற அந்தக் குறிக்கோளை எடுத்துரைத்து- பெரியார், அண்ணா திராவிட இயக்கத்தார், சுயமரியாதை இயக்கத்தார் எடுத்துச் சொன்ன அந்த வார்த்தைகளுடைய வடிவங்களாகத்தான் இங்கே நீங்கள் அமர்ந்திருக்கின்றீர்கள்.

அனைவரும் தமிழர்கள், தமிழ்ச் சாதி, திராவிட இனத்தினர் என்கின்ற அந்த உணர்வை நாம் பெற்றிருக்கிறோம். அத்தகைய உணர்வை நாம் பெறுவதற்குக் காரணமாக இருந்தவர், பெரியாரும், அவர் வழி நின்று அவருடைய கொள்கைகளை நனி நாகரீகமாக, நயமாக அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் எடுத்துச் சொன்ன பெரியாருடைய மாணவரும், நமக்கெல்லாம் ஆசிரியருமான அண்ணாவும் தான் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

அத்தகைய அண்ணாவுடைய ஆட்சியில் சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற நிலை உருவாயிற்று.

அதற்கு முன்பெல்லாம் சுயமரியாதை திருமணம் செய்தோம் என்றால் அவர்களை பக்கத்து வீட்டார்கூட திரும்பிப் பார்க்கப் பயப்படுவார்கள். ஏ அப்பா, அவன் "சு.ம.'' திருமணம் செய்து கொண்டவன், அவன் கடவுள் இல்லை என்று சொல்கிறவன், அவன் சாதி இல்லை, மதம் இல்லை, குலம் இல்லை, கோத்திரம் இல்லை என்றெல்லாம் கூறுகிறவன் என்று கூறி வெறுத்துக் கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது.

ஒருவருடைய வாழ்க்கை என்பது, அவர்கள் தங்களது ஆரோக்கியத்தை காத்துக் கொண்டு, தங்கள் நலன்களை காத்துக் கொண்டு, பிறர் நலம் பேணி வாழ்கின்ற வாழ்க்கையை யார் தேர்ந்தெடுத்து கொடுத்தார்களோ, அவர்களுக்கு எந்த நேரத்திலும், எந்தத் தீமையும் வராது.

தீமையும், நன்மையும் நாமாக தேடிக் கொள்வதே தவிர, மற்றவர்களிடமிருந்து வரக்கூடியவைகள் அல்ல என்று அன்றைக்கே பாடி வைத்திருக்கின்றனர்.

தமிழினம், எதைப் பற்றியும், எந்தச் சாத்திரங்களைப் பற்றியும் கவலைப்படாமல், தங்களுடைய இனம், குலம், கலை, நாகரிகம், பண்பாடு என்று அந்த அளவிலே தன்னை நடத்திக் கொண்டு, தமிழினம் இன்றைக்கு சில பேருடைய நுழைவால், சில பேருடைய சூழ்ச்சியால், சில பேருடைய தாக்கத்தால் அவற்றையெல்லாம் மறந்து பலருடைய கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத ஒரு இடத்தில் அமர்ந்திருக்கின்ற காட்சியை நாம் காணுகின்றோம்.

இன்றைக்கு தமிழகத்திலே திமுக என்ற ஓர் இயக்கம் மாத்திரம் இல்லாமல் இருந்திருந்தால் நான் கேட்கிறேன், நீங்கள் யாரும் என்னைத் தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது, நம்முடைய வீடுகளில் எவ்வளவு பி.ஏக்கள்., எம்.ஏக்கள், இவ்வளவு பட்டதாரிகள் இருப்பார்களா? இருக்க முடியாது.

இதற்கெல்லாம் காரணம் திராவிட இயக்கம் தான். இப்போது "திராவிட'' என்றாலே வெறுப்பவர்கள், ஒதுங்கிச் செல்பவர்கள், "நீ திராவிடனா?'' என்று கேட்டு ஒருவிதமாக நம்மை ஏறெடுத்துப் பார்ப்பவர்கள் - இன்றைக்கு இந்தச் சமுதாயம் இந்த அளவிற்கு பெருமை பெற்றிருக்கிறதென்றால், வளர்ந்திருக்கிறது என்றால், இதற்கெல்லாம் காரணம், நம்முடைய பகுத்தறிவு இயக்கம்- அந்த இயக்கத்தைத் தோற்றுவித்த பெரியார் ராமசாமி என்பதை மறந்துவிடக் கூடாது.

அத்தகைய பெரியார் என்கின்ற ஆலமரத்தின் விழுதுகளாக பல விழுதுகள், தமிழகத்திலே இன்றைக்கு தோன்றி, முளைத்து, துளிர் விட்டு, அவைகளும் மரமாகியிருக்கின்ற காட்சியை காணுகிறோம் என்றார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+