அணை விவகாரத்தில் மக்களை திசை திருப்பும் கேரள கட்சிகள்-பிரதமரிடம் திமுக புகார்

முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் திமுக எம்.பிக்கள் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்துப் பேசினர். பின்னர் அவரிடம் கோரிக்கை மகஜர் ஒன்றையும் சமர்ப்பித்தனர்.
அதில், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தொடர்ந்து கேரள அரசியல் கட்சிகள் அவதூறு மற்றும் பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பிரதமர் அவர்களைக் கேட்டுக் கொள்ள வேண்டும். உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை அமைதியாக இருக்குமாறும் அவர்களை பிரதமர் கேட்டுக் கொள்ள வேண்டும்.
1895ம் ஆண்டு கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை மிகவும் வலுவாக உள்ளதாக அனைத்துத் தரப்பிலும் சான்று தரப்பட்டுள்ளது, அது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக மற்றும் கேரள மக்களுக்கிடையே துவேஷத்தை உருவாக்கும் வகையில் இந்த கட்சிகள் செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது.
மேலும், இந்த அணை விவகாரத்தை மையமாக வைத்து டேம் 999 என்ற பெயரிலும் தேவையில்லாமல் பீதியைக் கிளப்பும் படத்தைத் தயாரித்து வெளியிட்டுள்ளனர். அணையின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து அவதூறுப் பிரசாரத்தை கேரளா மேற்கொண்டு வருகிறது.
டேம் 999 என்று பெயரிட்டிருப்பது அதன் இன்னொரு முகமாகும். 999 என்பது முல்லைப் பெரியாறு அணை 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதைக் குறிக்கும் வகையில் உள்ளது. இந்தப் படத்தை உடனடியாக நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும்.
வேண்டும் என்றே கேரள மக்களை திசை திருப்பும் வகையில் அங்குள்ள கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இதை திட்டமிட்டு அவர்கள் செய்து வருகிறார்கள்.
2004ம் ஆண்டு அணை மிகவும் பாதுகாப்பான நிலையில் இருப்பதாக உச்சநீதிமன்றமே தெரிவித்தது. மேலும், அதன் உண்மையான முழுக் கொள்ளளவுக்கு தண்ணீரைத் தேக்கி வைக்கலாம் என்றும் அது உத்தரவிட்டது. மத்திய நீர் ஆணையத்தின் அறிக்கைகளின் அடிப்படையில் இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. ஆனால் அதை கேரள அரசு ஏற்கவில்லை. இதனால்தான் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடும் நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டது என்று திமுக எம்.பிக்கள் கூறினர்.
இந்தப் பிரச்சினை தவிர, இந்திய இலங்கை கடல் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள குறிப்பிட்ட கடல் பகுதியினை, மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி என்று அறிவிக்க ஒப்புதல் அளித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இந்திய கடலோர காவல்படை பிரமாண பத்திரம் ஒன்றினை தாக்கல் செய்துள்ளது குறித்தும் பிரதமரிடம் திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
கடலோர காவல்படையினரின் இந்த முடிவு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கும் என்று பிரதமரை அவர்கள் வலியுறுத்தினர்.












Click it and Unblock the Notifications