பரமக்குடி துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை - ஜெ. உத்தரவு
கடந்த செப்டம்பர் 11-தேதி பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரன் குருபூஜையின் போது பெரும் கலவரம் ஏற்பட்டது. இதனைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
இதற்கு நீதி விசாரணை வேண்டும் என்று அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியதை அடுத்து தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையிலான ஒருநபர் விசாரனைக் கமிஷனை ஏற்படுத்தியது.
அரசு வேலை, நிவாரணம்
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் இழப்பீடும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையும் வழங்கவேண்டும் என்று எதிர்கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.