திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனின் மீது நிலஅபகரிப்பு புகார் அளித்த கிராம மக்கள்
சிவகங்கை: திமுக முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பனின் தூண்டுதலின் பேரில் 5.52 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டதாக சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பன்னீர் செல்வத்திடம் கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த இலுப்பைக்குடி கிராமத்தில் சுயம்பிரகாசேஷவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 5.52 ஏக்கர் நிலம் திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனின் தூண்டலின்பேரில் அபகரிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இலுப்பைக்குடி கிராம மக்கள் சார்பாக சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பன்னீர் செல்வத்திடம் அளிக்கப்பட்ட புகாரில் கூறியிருப்பதாவது,
இலுப்பைக்குடி கிராமத்தில் உள்ள சுயம்பிரகாசேஷவரர் கோவில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில் ஒரு பொது டிராஸ்டின் கீழ் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் டிரஸ்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனை பயன்படுத்தி காரைக்குடி மெய்யப்பன் மகள் வள்ளிக்கண்ணு, கருப்பணன் சேர்வை மகன் அய்யாச்சாமி மற்றும் லட்சுமி நாராயணன், நாகரத்தினம் சேர்வை மகன் குணசேகரன், தினகரன் மகன் செந்தில்குமார், ரெங்கசாமி உடையார் மகன் கோவிந்தசாமி, மெய்யப்பன் அம்பலம் மகன் சிதம்பரம், சண்முகநாதன் மகன் புஷ்பநாதன், முத்துதுரை மனைவி வானதி, அருளானந்தம் ஆகியோர் கூட்டுச் சதி செய்து லாபம் அடையும் நோக்கில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோவிலுக்கு சொந்தமான 5.52 ஏக்கர் நிலத்தை தங்கள் சொந்த பெயர்களில் பட்டா போட்டுக்கொண்டனர். மேலும் அதற்கு வரி விதிப்பு கிடைக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
மேற்கண்ட அனைவரும் காரைக்குடி நகரைச் சேர்ந்த முக்கிய திமுக நிர்வாகிகள். கடந்த 2006-11ம் ஆண்டு வரை நடந்த திமுக ஆட்சியில் இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த திமுகவின் பெரியகருப்பனின் தூண்டுதலின் பேரில் இந்த நிலஅபகரிப்பு நடந்துள்ளது.
இந்த சம்பவம் நடந்த போது திமுக அதிகாரத்தில் இருந்ததால் புகார் கொடுக்க பயமாக இருந்தது. மேலும் இது குறித்து புகார் கொடுக்கக் கூடாது என்று மிரட்டல்
விடுத்திருந்தனர். இதனால் அப்போது புகார் ஏதும் செய்யவில்லை. கோவிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புகார் கொடுத்த இலுப்பைக்குடி கிராம மக்கள் கூறியதாவது,
கோவில் நிலம் மோசடி குறித்து புகார் அளித்துள்ளோம். புகாரை பெற்று கொண்ட சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் என்றனர்.