சுரங்க ஊழல்:ஸ்ரீலட்சுமி ஐஏஎஸ்-ஐ 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி
பெங்களூர்: முன்னாள் கர்நாடக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு இரும்பு சுரங்கங்கள் முறைகேடான முறையில் ஒதுக்கிய வழக்கில் ஆந்திர மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீலட்சுமியை நேற்று சிபிஐ கைது செய்தது. ஸ்ரீலட்சுமியை 3 நாள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கர்நாடக மாநிலம், பெல்லாரியில் ஏராளமான இரும்பு சுரங்கங்கள் உள்ளன. கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவரது சகோதரர்கள் பெல்லாரியில் உள்ள சில இரும்பு சுரங்கங்களை நடத்தி வருகின்றனர். அந்த சுரங்கங்கள் அவர்களுக்கு முறைகேடான முறையில் ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதேபோல ஆந்திர மாநிலம், அனந்தபூரிலும் ரெட்டி சகோதரர்களுக்கு முறைகேடான முறையில் சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ஆட்சியில் தொழிற்சாலை துறை செயலாளராக இருந்த ஸ்ரீலட்சுமி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக ஸ்ரீலட்சுமியிடம் 3 முறை சிபிஐ விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் தற்போது குடும்ப நலத்துறை கமிஷனராக உள்ள ஸ்ரீலட்சுமி நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஸ்ரீலட்சுமியை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
இருதய நோயாளி என்பதால் சிறையில் தனக்கு சிறப்பு சலுகைகள் வழங்கமாறு ஸ்ரீலட்சுமி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இன்று நீதிமன்றத்தில் ஸ்ரீலட்சுமியை மீண்டும் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் நேற்று ஸ்ரீலட்சுமி சிபிஐ அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டு இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இன்று சிபிஐ தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஸ்ரீலட்சுமியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தது. மேலும் டிசம்பர் மாதம் 1ம் தேதி மாலை 4 மணிக்கு ஸ்ரீலட்சுமியை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இது குறித்து ஸ்ரீலட்சுமி கூறியதாவது,
முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் உத்தரவின் பேரில் தான் ஜனார்த்தன ரெட்டிக்கு சுரங்கம் ஒதுக்கப்பட்டது. நான் அதற்கு பொறுப்பு அல்ல என்றார்.
கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீலட்சுமியின் கணவர் கோபி கிருஷ்ணா சிஐடி பிரிவு ஐ.ஜி.யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.